Saturday, January 8, 2011

இக்கரைக்கு அக்கரை பச்சை

மான் ஒன்று ஓடையில் நீர் குடிக்கச் சென்றபோது சிங்கத்தால் துரத்தப்பட்டு எப்படியோ தப்பிக்கொண்டது.  
அன்று முதல் அந்த மான்,சிங்கம் என்றாலே பயந்து கொண்டிருந்தது. எனவே மான் மனிதர்கள் வாழும் நாட்டிற்குள் சென்றால் பயமின்றி வாழலாம் என்று நினைத்து காட்டை விட்டுப் புறப்பட்டது. மான் சென்று கொண்டிருந்த வழியில் ஆடு ஒன்றுகாட்டை  நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்து, இவளவு வேகமாக வருகிறாயே எங்கே என்று கேட்டது மான். காட்டிற்குத்தான் என்றது ஆடு, ஏன் என்று கேட்டது மான். காட்டில் பயமின்றி வாழத்தான் என்றது ஆடு. நாட்டில் என்ன பயம்? என்று கேட்டது மான். மனிதர் பயம்தான் என்றது ஆடு. என்ன! மனிதர் பயமா? சிங்கத்தை விடமனிதர்கள் பொல்லாதவர்களா என்று வியப்பாகக் கேட்டது மான். ஆமாம் சிங்கத்தை விட மனிதர்கள் மிகவும் பொல்லாதவர்கள். சிங்கம் பசித்தால்தான் நம்மைக் கொல்லும், ஆனால் மனிதர்கள் எம்மைக் கொன்று தின்பதற்காகவே வளர்க்கிறார்கள். சிங்கத்திடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் ஆனால் மனிதர்களிடமிருந்து தப்பவேமுடியாது. நல்லவேளை இன்று என்னைக் கொல்லப் பார்த்தார்கள். முன்னரே இதை அறிந்து நான் அவர்களிடமிருந்து தப்பிக்கொண்டேன். இல்லாவிட்டால் இந்நேரம் அவர்களுக்கு உணவாகியிருப்பேன் என்று ஆடு சொன்னது. இதைக் கேட்ட மானுக்கு சிங்கத்தின் பயம் போய்விட்டது. அதற்குப் பதில் மனிதர்கள் என்றாலே பயம் வந்து விட்டது. எனவே தற்போது இருக்கும் காடே நலம் என்று கருதி, ஆட்டிற்கு நன்றி கூறிவிட்டு மறுபடி காட்டை நோக்கிச் சென்றது மான்

1 comment: