Sunday, February 20, 2011

பாதை

ருக்குச் சற்றுத் தள்ளி ஒரு சிறிய ஆறு.சாய்ந்து விழுந்த ஒரு தென்னைமரத்தை அந்த ஆற்றின் குறுக்கே போட்டிருந்தார்கள்.ஆற்றைக் கடக்க அதுதான் பாலமாகப் பயன்பட்டது. 


ஆனால் அதில் ஒரு சிக்கலும் இருந்தது. ஒரே நேரத்தில் இருவர் எதிரெதிராக வந்தால் ஒருவரை ஒருவர் கடந்துசெல்ல முடியாது.யாரேனும் ஒருவர் திரும்பிக் கரைக்குச் சென்றாகவேண்டும்;  பாலத்தை மற்றவர் கடந்தவுடன் மீண்டும் பாலத்தில் ஏறிக் கடக்கவேண்டும். 

அந்தத் தென்னைமரப் பாலம் அவ்வளவு குறுகலானது; ஊரில் இது எல்லாருக்கும் தெரியும். ஒரு நாள் பெரியவர் ஒருவர் அந்த ஆற்றைக் கடக்கப் பாலத்தில் ஏறி நடந்தார்; பாலத்தின் முக்கால் பகுதியைக் கடந்துவிட்டார்.
அதே நேரத்தில் எதிரே இளைஞன் ஒருவன் பாலத்தில் ஏறி நடக்கத் தொடங்கினான். 

அவன் அடாவடியான ஆள்; யாரையும் மதிப்பதில்லை; எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுவான். அவனுடைய குணம் ஊராருக்குத் தெரியும்.
பெரியவரும் அவனும் பாலத்தில் எதிர்ப்பட்டார்கள். விலகிச் செல்ல வழியில்லை. 

“தம்பி, அன்புகூர்ந்து எனக்கு வழிவிடுங்கள்! இன்னும் சில அடி தொலைவுதான்; நான் பாலத்தைக் கடந்துவிடுவேன்!” என்றார் பெரியவர். 

“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு இல்லை!” என்றான் அந்த இளைஞன்; அவன் குரலில் ஆணவம் வழிந்தோடியது. 

பெரியவர் ஏதும் சொல்லாமல் திரும்பி வந்த வழியே நடக்கத் தொடங்கினார்.
“ஏன் திரும்பிவிட்டீர்கள்?” என்று ஏளனமாகக் கேட்டான் அவன். 

“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு!” என்று சொல்லிக்கொண்டே நடந்தார் பெரியவர்.