Saturday, March 26, 2011

சமயோசிதம்


அந்த ஊரின் பிரதான சாலைதொடர் மழைக்குப் பிறகு  குண்டும் குழியுமாய் போக்குவரத்துக்கே லாயக்கில்லாமல் சேதமாகியிருந்தது. பாதாசாரிகளும் வாகனம் ஓட்டுபவர்களும் மிகவும் அவதிக்குள்ளானார்கள்; சாலையை  சீர்படுத்தக் கோரி அரசு அதிகாரிகளுக்குப் பலமுறை விண்ணப்பித்தும் பலனேதும் ஏற்படவில்லை.



பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்திக்கு ஒரு பிரமாதமான யோசனை தோன்றியது. அவருடைய பள்ளி பிரதான தெருவில் தான் இருந்தது. பள்ளி தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆனதைக் கொண்டாட ஊரார் ஒத்துழைப்புடன் ஒரு  விழாவிற்கு ஏற்பாடு செய்தார். கல்வி மந்திரியை அழைத்து விழாவை சிறப்பாக நடத்தித் தர ஏற்பாடு செய்தார்கள்.

ஆச்சரியம்!

அத்தனை நாட்களும் கவனிப்பாரற்று இருந்த  சாலை சீரமைப்புப் பணி போர்க்கால அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்டு, சீக்கிரமே முடிவடைந்தது. அலங்கோலமாக இருந்த தெரு ஒரு புத்தப்புது தார் ரோடாக மாறியது! பொது மக்களுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி!