Saturday, November 13, 2010

மந்திர புல்லாங்குழல்

ஆனைக்குடி என்ற ஊரில் அழகேசன் என்ற ஏழை இளைஞன் இருந்தார், அவர் பக்கத்து ஊரில் ஜம்பு என்ற ஜமிந்தாரிடம் வேலை பார்த்து வந்தார், கடுமையாக உழைத்தாலும் ஜமிந்தார் ஒன்றுமே கொடுக்க மாட்டார், சாப்பாடு மட்டுமே போடுவார். இருந்தாலும் தனக்கு வேலை கொடுத்த ஜமிந்தாருக்கு மிகவும் உண்மையாக உழைத்தார், ஜமிந்தார் கொடுப்பதில் தன் தாயாருக்கு பொருட்கள் வாங்கி கொடுத்து அனுப்புவார்.

இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்து, பின்னர் தன் தாயை பார்க்க போவதாக ஜமிந்தாரிடம் சொன்னார் அழகேசன். ஜமிந்தாருக்கு அவரை விட மனசு இல்லை, இருந்தாலும் போய் வா, இதோ இரண்டு ஆண்டுக்கான உன் கூலி என்று கூறி 5 செப்பு காசுகள் கொடுத்தார்.

அவரும் மனம் கோணாமல் தாயாரைப் பார்க்க போகிற மகிழ்ச்சியில் சந்தோசமாக வாங்கி, முதலாளிக்கு நன்றி சொல்லிட்டு ஊருக்கு கிளம்பினார். அதே நேரம் அந்த ஊரில் ஒரு பெரிய திருடன் ஒருவன், ஜம்பு ஜமிந்தாரின் வீட்டை ரொம்ப நாட்களாக நோட்டம் போட்டுட்டு வந்தான். அழகேசன் இருந்தவரை அவனால் திருட முடியவில்லை, அழகேசன் ஊருக்கு கிளம்புவதையும், அவர் சம்பளம் வாங்கி சென்றதையும் பார்த்தான், கண்டிப்பாக நிறைய தங்கம் கொண்டு செல்வார் என்று நினைத்தான், அதற்கு முன்னர் ஜமிந்தார் வெளியே சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து, அங்கே பாதுகாப்பாக வைத்திருந்த தங்க காசுகள், நகைகள் மற்றும் அனைத்து ஆபரணங்களையும் கொள்ளை அடித்து, பெரிய மூட்டை கட்டினான்.

பேராசை யாரை விட்டது, இது போதாது என்று நினைத்து, அழகேசன் கையில் இருக்கும் பொருட்களையும் பிடுங்க திட்டமிட்டான், எப்படி அழகேசன் காட்டு வழியாகத் தான் நடந்து ஊருக்கு செல்வார், எனவே அங்கே அவரை அங்கேயே மடக்கி, இருப்பதை திருடலாம் என்று நினைத்தான். குறுக்கு பாதையில் ஓடி காட்டில் ஒளிந்துக் கொண்டான்.

அழகேசன் காட்டு வழியாக செல்லும் போது ஒரு இடத்தில் ஒரு குள்ளமான ஒருவர் கீழே விழுந்து கிடந்தார், அவரை ஓடி போய் தூக்கி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த குள்ள மனிதர் கண் விழித்து பார்த்தார், அவரது தோற்றம் வேடிக்கையாக இருந்தது. நீண்ட வெண்ணிறத்தாடி, தலையில் கூம்பு வடிவில் தொப்பி.


“அய்யா, பெரியவரே! என்ன ஆச்சு, ஏன் மயங்கி கிடக்கிறீங்க”
“தம்பி, என்னை காப்பாற்றியதற்கு நன்றி, நான் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறேன், எனக்கு உன்னால் முடிந்த உதவியை செய்வாயாக”
“அ=ய்யா, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானம் இதோ இருக்குது, இதில் 2 செப்பு காசுகள் நீங்க வைத்துக் கொள்ளுங்க”
‘தம்பி! உன் இரக்க குணம் என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்யுது, கை மாறாக நான் உனக்கு உதவ இருக்கிறேன். எனக்கு சில மந்திர சக்திகள் இருக்குது, அதனை பயன்படுத்த மற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறேன், உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன்”

அழகேசனுக்கு ஆச்சரியம், நம்பமுடியவில்லை. என்னடா இது, நாம இவருக்கு உதவினால் அவர் நமக்கு உதவுகிறாராம், அதுவும் மந்திரசக்தியால், புரியவில்லையே என்று திகைத்தார்.

“தம்பி, சந்தேகம் வேண்டாம், உனக்கு உதவி செய்ய இருக்கிறேன், என்ன வேண்டும் கேள்”
“அய்யா, எனக்கு இசையில் மிக்க ஆர்வம் உண்டு, நான் ஊதினால் இனிமையான இசை வரக்கூடிய ஒரு புல்லாங்குழல் கொடுங்க, அதை கேட்டவர்களும் மெய் மறந்து போகும் அளவுக்கு இருக்க வேண்டும்”

உடனே குள்ள மனிதர் கண்ணை மூடி ஏதோ மந்திரம் சொல்ல, கையில் அழகான புல்லாங்குழல் வந்தது, அதை அழகேசனுக்கு கொடுத்து, ஆசிர்வாதம் செய்து, வேறு வழியில் சென்று விட்டார்.

அழகேசனும் மகிழ்ச்சியாக நடக்கத் தொடங்கினார், திடிரென்று அவர் முன்னால் பெரிய கத்தியோடு அந்த திருடன் வந்து நின்றான், மரியாதையாக உங்க முதலாளி கொடுத்த காசுகளை எனக்கு கொடு என்றான். அழகேசனுக்கு பயம், ஏன் வீணாக திருடனிடம் சண்டை போட்டு, உயிரை இழக்க வேண்டும், என்று நினைத்து, பையில் இருந்த 3 செப்பு காசுகளை கொடுத்தான். என்ன 3 செப்பு காசா, அவர் 5 அல்லவா கொடுத்தார், தங்கம் கிடையாதா, கஞ்சப்பயல், அதான் அவன் வீட்டில் நான் இத்தனை தங்கம் இருந்ததா, ஆமாம் மீதி 2 காசு எங்கே, அதையும் கொடு, இல்லை என்றால் கொன்று விடுவேன்”

“என்னிடம் 3 தான் இருக்குது, 2 ஒரு குள்ள மனிதருக்கு கொடுத்து விட்டேன்”
“நான், நம்ப மாட்டேன், எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?”
அழகேசன் என்ன செய்வது என்று யோசித்தார், திருடனிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு ஆயுதம், அந்த புல்லாங்குழல் தான், அதை உபயோகிக்கலாம் என்று முடிவு செய்து “மீதி 2 காசு, இதுக்குள்ளே இருக்குது, இரு, ஊதி எடுக்கிறேன்” என்று கூறி புல்லாங்குழலை இசைக்கத் தொடங்கினார்.

அதிலிருந்து அருமையான இனிய இசை கிளம்பியது, அனைத்து பறவைகளும் மெய் மறந்து கேட்டன, திருடன் சும்மாவா இருக்க முடியும், திருடனும் ஆகா, ஓகோ என்று தை தைக்கா என்று குதிக்கத் தொடங்கினான், அழகேசன் விடாமல் இசைக்க, திருடன் அங்கே இங்கே ஆடத் தொடங்கினான், கீழே விழுந்தான், முள் செடியில் மாட்டிக் கொண்டான், தொடர்ந்து ஆட உடம்பு எல்லாம் அடிப்பட்டு, ரத்தக்களரியாகி, “அய்யா, அய்யா, தயவு செய்து புல்லாங்குழல் இசைப்பதை நிறுத்துங்க, இல்லேன்னா, நான் செத்து போயிடுவேன், என்னால் வலி தாங்க முடியலை, ஆடாமலும் இருக்க முடியலை, நான் திருடியதை எல்லாம் உங்களுக்கே கொடுத்து விடுகிறேன்” என்றான்.

அழகேசனும் அவனிடமிருந்ததை எல்லாம் வாங்கி விட்டு, அவனை ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பினார்.

அங்கே ஜமிந்தார் “அய்யோ, எல்லாமே போயிட்டதே, நான் சம்பாதித்தது எல்லாமே களவு போயிட்டதே, நான் தவறாக சம்பாதித்தது முதல் எல்லாமே போயிட்டதே, இனிமேல் நான் என்ன செய்வேன்” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

அழகேசன் அவரை பார்த்து “அய்யா அழ வேண்டாம், திருடன் திருடியதை எல்லாம் நான் வாங்கி வந்து விட்டேன், அவனன காட்டில் கட்டி வைத்திருக்கிறேன், உடனே ஊர்க்காவலர்கல் போய் பிடியுங்க, இதோ உங்க நகைகள், பணம், சரி பாருங்க” என்றார்.

ஜமிந்தாருக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை, இத்தனை நாள் கொடுமைப்படுத்தியும், நேர்மையாக நடந்து கொண்ட அழகேசன் மீது மரியாதை ஏற்ப்பட்டது, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அழகேசனுக்கு அந்த ஊரிலேயே பங்களா ஒன்றையும், நிறைய நிலங்களையும் கொடுத்து உதவினார். அழகேசனும் தன் தாயாருடனும், அற்புத புல்லாங்குழலுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

Friday, November 12, 2010

மூன்று மரங்களின் கதை

ஒரு அடர்த்தியான காட்டில் முன்று மரங்கள் சிறந்த நண்பர்களாக இருந்தன. இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு கனவு இருந்தன.



முதல் மரம் தன் கனவை தன் நண்பர்களிடம் சொன்னது, " நான் ஒரு மாணிக்க பேழையாக மாறவெண்டும் என்பதே என் கனவு, என்னுள் அரசர்கள் தங்கள் வைரம், முத்து, மாணிக்கம் போன்ற விலைமதிக்கமுடியாத செல்வங்களை வைக்கவேண்டும், நான் அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்"

இரண்டாவது மரம் தன் கனவை சொல்ல ஆரம்பித்தது, " நான் ஒரு மிக பெரிய போர் கப்பல் ஆக வேண்டும், நான் அரசர்களையும், மாமன்னர்களையும் சுமக்க வேண்டும், பலத்த புயல், கொடும் காற்று போன்ற எதுவாக இருந்தாலும், அவ்ர்கள் என்னில் பத்திரமாக பயணம் செய்ய வேண்டும்"என்ற தன் கனவை முடித்ததும்

மூன்றாவது மரம் சொன்னது "நான் நீண்டு உயர்ந்து வளர்ந்து மிக பெரிய மரமாவேன், அப்போது என்னை காணும் மக்கள் எல்லாம் வானையும், கடவுளையும் பார்த்து, நான் அவர்களுக்கு எவ்வளவு நெருங்கி விட்டேன் என்றும், எக்காலமும் நானே உலகின் சிறந்தமரம் என்றும் கூறவேன்டும்" என்று கூறியது.

பல வருடங்களாக தன் கனவு மேல் கொண்ட தவங்களுக்கு பிறகு, ஒரு நாள் சில மரவெட்டிகள் அந்த காட்டிற்க்கு வந்தனர். அவர்களில் ஒருவன் முதல் மரத்திடம் வந்து, " நான் இதை வெட்டி ஒரு தச்சனிடம் விலைக்கு கொடுப்பேன்" என்று கூறினான், இதை கேட்ட அந்த முதல் மரம் தான் மாணிக்க பேழையாக போவதாக நினைத்து மகிழ்ந்தது.

இரண்டாவது மரத்திடம் வந்த மரவெட்டி அதன் உறுதியை பார்த்து, "நான் இதை வெட்டி துறைமுகத்தில் விற்பேன்" என்றான். இதை கேட்ட மரம் தான் ஒரு மிக பெரிய போர் கப்பலாக போவதாக எண்ணி மகிழ்ந்தது.

மற்றொரு மரவெட்டி மூன்றாவது மரத்திடம் வந்ததும் அது பயந்தது, அது வெட்டபட்டால் அதன் கனவுகள் அழித்து போகும் என நினைத்தது. அவன் அம்மரத்தை பார்த்து "நான் இம்மரத்திடம் பெரியதாக எதுவும் எதிர் பார்க்கவில்லை, இருப்பினும் இதை நான் வெட்டி கொண்டு செல்லுவேன்" என்றான்.

முதல் மரம் தச்சனிடம் வந்தபோது, அவன் அதை ஒரு வைக்கோல் பெட்டியாக செய்தான், மாணிக்க பேழையாக வேண்டிய தன் கனவு ஒரு வைக்கோல் பெட்டியாக ஆகிபோனதை நினைத்து அது வருந்தியது.

போர் கப்பல் கனவுடன் துறைமுகம் நுழைந்த இரண்டாவது மரம் ஒரு மீன்பிடி படகாக செய்யபட்டது.

மூன்றாவது மரம் பெரிய பாளங்களாக வெட்டி ஒரு இருட்டறையில் இடப்பட்டது.

காலம், அவர்களது கனவுகளை மறக்கவைத்தது.

ஒரு கொடுங்குளிர் இரவில், ஒரு தம்பதியர் ஒரு மாட்டு தொழுவத்திற்க்கு வந்தனர், பெண்மணி ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.. அவர்கள் அந்த குழந்தையை முதல் மரத்தில் இருந்த செய்த வைக்கோல் பெட்டியில் வைத்தனர், அந்த மரம் அப்போது தான் உணர்ந்தது தான் உலகின் விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை தாங்கி பாதுகாத்திருப்பதை.

சில வருடஙளுக்கு பிறகு சிலர் இரண்டாவது மரத்தில் இருந்து செய்யப்பட்ட மீன்பிடி படகில் எறினர். படகு நடு கடலில் செல்லுகையில், பெரும் புயல் வீச துவங்கியது. அந்த மரம் படகில் உள்ளவர்களை பத்திரமாக கரை சேர்ப்பதை பற்றி கவலை கொண்ட பொழுது , படகில் இருந்தவர்கள் அங்கு அமைதியாக தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை எழுப்பினர்., அவர் எழுந்து "அமைதி" என்றதும் புயல் அடங்கியது.

அந்த நேரத்தில் இரண்டாவது மரம் தான், அரசர்களின் அரசரை சுமந்ததை குறித்து மகிழ்ந்தது.

கடைசியாக, அந்த மூன்றாவது மரம் இருட்டறையில் இருந்த எடுத்து செல்லபட்டது. அது ஒரு மாமனிதரால் சுமந்து செல்லப்பட்டது, மக்கள் அதை சுமந்தவரை நிந்தித்தனர்.

அவரை அம்மரத்தில் ஆணியால் அறைந்து மலை உச்சியில் நட்டு வைத்தனர். ஞாயிறு வந்தபோது வாண்ணளவு உயர்ந்து கடவுளின் அருகில் மிக நெருக்கமாக இருந்ததை நினைத்து மகிழ்ந்தது, எனென்றால் அந்த மரத்தை சுமந்து, பின்னர்அதில் அறையப்பட்டவர் தான் தேவமைந்தன் இயேசு கிறிஸ்து......

Thursday, November 11, 2010

இரக்கமில்லா கம்சனும், இதயமில்லா கபீஷூம்

பயங்கரமான மிருகங்கள் வசிக்கும் ஒரு அடர்ந்த காடு, அங்கே இருந்த உயரமான மலையில் இருந்து விழும் நீர் அருவியானது ஆறாக மாறி ஓடிக் கொண்டிருந்தது, ஆற்றின் இருபக்கங்களிலும் நிறைய பழம் தரும் மரங்கள். அந்த மரங்களின் மேலே பறவைகள், குரங்கு கூட்டங்கள் வாழ்ந்து வந்தன.

அங்கே கபீஷ் என்ற புத்திச்சாலி குரங்கு இருந்தது, அது ரொம்பவும் நல்ல குரங்கு, அந்த ஆற்றில் ஒரு கம்சன் என்ற முதலை இருந்தது, அந்த முதலையானது கபீஷ் குரங்கோடு பேசி, நட்பு உண்டாக்கிக் கொண்டது. கபீஷ் குரங்கு மரத்தின் மேலிருந்து நன்கு பழுத்த கொய்யா, பலா, மாம்பழங்களை பறித்து போடும், அந்த முதலையும் அவற்றை உண்டு மகிழும்.

கம்சன் கபீஷிடம் ஆற்றின் அடுத்த பக்கம் இருக்கும் ஊரின் சிறப்புகளை கதை கதையாக சொல்லும், கபீஷீம் ஆச்சரியமாக கேட்டு மகிழும், அதற்கு ஒரு நாள் எப்படியும் அந்த பக்கம் போய் ஊரை சுற்றிப் பார்க்க ஆசை. கம்சனும் அழைத்துச் செல்வதாக சொன்னது.

தினமும் காலையில் கம்சன், கபீஷ் இருக்கும் மரங்கள் அருகில் வரும், பழங்களை சாப்பிட்டு, பேசி விட்டு மாலையில் வீடு திரும்பும். அவ்வாறு வீடு செல்லும் போது கபீஷ் கொடுத்த பழங்களையும் எடுத்துச் செல்லும்.

கம்சன் வீட்டில் அதன் மனைவி குழந்தைகள் இருந்தார்கள். குழந்தைகள் தந்தை தரும் இனிப்பாக பழங்களை சாப்பிட்டு மகிழும். தினமும் தன் கணவர் கொண்டு வரும் பழங்களை சாப்பிட்ட பெண் முதலை, ஒரு நாள் “ஆமாம், உங்களுக்கு எப்படி தினமும் இத்தனை பழங்கள் கிடைக்கிறது” என்று கேட்டது.

அதற்கு அந்த முதலை “எனக்கு கபீஷ் என்ற ஒரு குரங்கு நண்பன் இருக்கிறான், அவன் ரொம்பவும் நல்லவன், அவன் தான் எனக்கு தினமும் நிறைய பழங்களை தேடி பறித்து கொடுப்பான், அவனுக்கு தான் நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்” என்றது.

உடனே குட்டி முதலைகள் “அப்பா, அப்பா, நாளை கபீஷ் மாமாவுக்கு எங்களது நன்றியை சொல்லுங்க” என்றன.

பெண் முதலைக்கு ரொம்ப நாட்களாக குரங்கு கறி சாப்பிட ஆசை, அதிலும் குரங்கின் இதயம் என்றால் ரொம்ப ருசியாக இருக்கும் என்று பக்கத்து வீட்டு முதலை சொல்லக் கேட்டப் பின்பு, அதன் ஆசை அதிகமாகி விட்டது.

தன் கணவனுக்கு ஒரு குரங்கு நண்பன் இருக்கும் போது அதை எளிதாக வீட்டிற்கு வரவழைத்து சாப்பிட்டு விடலாம் என்று எண்ணியது.

பெண் முதலை பல முறை குரங்குகளை படிக்க தரைக்கு போனாலும் பிடிக்க முடியவில்லல. காரணம் குரங்குகள் வேகமாக ஓடி, மரத்தின் மேல் ஏறிவிடும். முதலையால் மரத்தில் ஏற முடியாது தானே.

இப்படி பலமுறை ஏமாந்த அந்த பெண் முதலை, இந்த முறை கணவன் உதவியால் குரங்கின் கறி சாப்பிடலாம் என்று நம்பியது. தான் நேரிடையாக சொன்னால் தன் கணவன் தனக்கு உதவ மாட்டார், எனவே ஏதாவது நாடகம் ஆட வேண்டும் என்று திட்டம் போட்டது.

அடுத்த நாள் பெண் குரங்கு திடிரென்று மயக்கம் போட்டு விழுந்து விட்டது, எழுந்திருக்கவே இல்லை, ஆண் குரங்கு பயந்து போய் மருத்துவரை அழைக்க போனது, வீட்டில் சமையலே செய்யவில்லை, குட்டி முதலைகள் பசியால் துடித்தன.




மருத்துவர் ஒரு பெண் முதலை, அதுவும் அந்த முதலையின் நண்பி, வந்த மருத்துவ முதலை, பெண் முதலையை சோதித்து பார்த்து, “உங்க மனைவிக்கு கடுமையான இதய நோய், இதை சரி செய்ய மருந்தே கிடையாது, ஆனால் ஒரு வழி இருக்கிறது, அதை செய்தால் சரியாகி விடும்” என்றது.

கம்சன் முதலை “உடனே சொல்லுங்க, என்ன செய்ய வேண்டும்”.




மருத்துவ முதலை “அது ஒன்றும் இல்லை, உயிரோடு இருக்கும் குரங்கின் ரத்தமும், இதயமும் சாப்பிட்டால், உடனே உங்க மனைவியின் இதய நோய் தீர்ந்து விடும், இல்லை என்றால் இன்னும் ஒரு வாரத்தில் உங்க மனைவி இறந்து விடுவார்” என்றது.

அதை கேட்டதும் கம்சன் முதலைக்கு இதயமே நின்று விடுவது போலிருந்தது “மூலிகை, வேர், காய், கனி இப்படி ஏதாவது என்றால் எப்படியாவது தேடி கொண்டு வந்து விடலாம், ஆனால் குரங்கின் இதயம் என்றால் எங்கே போவது, என்ன செய்வது என்று தெரியவில்லையே?”.

அப்போ கண் விழித்த மனைவி முதலை “உங்களுக்கு தெரிந்த குரங்கு ஒன்று இருக்கிறதே, அதை எப்படியாவது ஏமாற்றி அழைத்து வாங்க”

“அய்யோ, என் நண்பன் கபீஷா, அது பாவமில்லையா, அவன் நமக்கு எத்தனையோ முறை உதவி செய்திருக்கிறானே, அவனையா கொல்வது, என்னால் முடியது” என்றது கம்சன் முதலை

“அப்போ, நான் செத்து போனால் உங்களுக்கு கவலை இல்லையா, நம் குழந்தைகள் பட்டினியால் செத்து போகப் போறாங்க, அப்புறமும் நீங்க உங்க நண்பனோடு இருங்க” என்று புலம்பியது. குட்டி முதலைகளும் என்ன என்று சரியாக புரியாமல் அம்மாவோடு சேர்ந்து அழுதன.

அவர்களின் அழுகுரல் கேட்ட சகிக்காமல் ஆண் முதலை வீட்டை விட்டு வெளியே வந்தது, அதற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கபீஷை பார்க்க சென்றது, கபீஷை கண்டதும், கபீஷின் அன்பை கண்டு மனைவியின் கோரிக்கையை மறந்தது. வழக்கம் போல் கபீஷிடம் பேசி விட்டு, அது கொடுத்த பழங்களை வீட்டிற்கு எடுத்து சென்றது.

மாலையில் மீண்டும் வீட்டில் ஒரே ரணகளம், அழுகை. இறுதியாக மனைவியிடம் “சரி! நான் என் நண்பனை அழைத்து வருகிறேன், நம் வீட்டில் நல்ல விருந்து தயாரித்து வை, கபீஷ் கடைசியாக பாயாசம் குடிக்கும் போது அதில் மயக்க மருந்து கலந்து கொடு, கபீஷ் மயங்கியதும், நீ அவன் ரத்தம் குடித்து, இதயத்தை சாப்பிட்டு விடு, நான் அப்போ அங்கே இருக்க மாட்டேன்” என்றது.

பெண் முதலையும் மிகவும் மகிழ்ந்து கபீஷிக்கு என்று பெரிய விருந்தே தயார் செய்தது, குட்டி முதலைகளும் விபரம் தெரியாமல் வீட்டிற்கு விருந்தாளி கபீஷ் மாமா வரப்போறாங்க என்று சந்தோசமாக இருந்தது.

அன்று இரவு சரியான மழை, இடி மின்னலோடு கனத்த மழை பெய்தது, அடுத்த நாள் கபீஷைப் பார்த்த முதலை “இன்று எனக்கு திருமண நாள், நீ கட்டாயம் எங்க வீட்டிற்கு வர வேண்டும், உனக்கு மத்தியானம் சிறப்பு விருந்து தயாராக உள்ளது, உன் வரவை என் மனைவி, குழந்தைகள் ஆவலோடு எதிர் பார்க்கிறாங்க”

அதை கேட்டதும் கபீஷ் குரங்கு மகிழ்ச்சி அடைந்து கம்சனுக்கு திருமண நாள் வாழ்த்துகள் கூறியது, உடனே அங்கே இங்கே என்று ஓடி நல்ல சுவையான பழங்கள் நிறைய பறித்து வந்தது, இன்னும் கிழங்கு வகைகள், தானியங்கள் என்று நிறைய கொண்டு வந்து கொடுத்தது.

கபீஷ் கம்சனிடம், “ஆமாம் நான் எப்படி உங்க வீட்டிற்கு வர முடியும்” என்றது,
உடனே கம்சன் சொன்னது, “நீ என் முதுகில் ஏறி அமர்ந்துக் கொள், நான் உன்னை பத்திரமாக அழைத்துச் சென்று, மீண்டும் இங்கே கொண்டு வந்து விடுகிறேன்”.




கபீஷீம் கம்சனின் முதுகில் ஏறி அமர்ந்துக் கொள்ள, கம்சன் மெதுவாக சென்றது. கம்சனின் வீட்டை அடைந்ததும், கம்சனின் மனைவி வரவேற்று சூடாக காப்பி கொடுத்தது, குட்டு குழந்தை முதலைகள் பயங்கரமான குதுகுலமடைந்து, கபீஷிடம் பேசி மகிழ்ந்தன.

சிறிது நேரத்தில் கம்சனும் மனைவியும் சமையல் அறைக்கு செல்ல, கபீஷ் குட்டி முதலைகளுக்கு கதை சொன்னது, ஜெய் அனுமானின் வீரபிரதாபங்களை சுவையாக சொன்னது, அதை கேட்டு குட்டி முதலைகள் மகிழ்ந்தன, அப்போ அனுமான் தன் இதயத்தை திறந்து அதில் இராமர் சீதை இருப்பதை சொன்னது, அதை கேட்டதும் குட்டி முதலைகள் “மாமா! உங்க இதயத்தை திறந்து காட்டினாலும் அதில் இராமர் சீதை இருப்பாங்களா, அதையா எங்க அம்மா சாப்பிட போறாங்க, பாவமில்லையா?” என்று கூறின.

அதைக் கேட்டதும் கபீஷ் திடுக்கிட்டது, இங்கே ஏதோ சதி நடக்குது, அதை யாருக்கும் தெரியாமல் அறிய வேண்டும், குழந்தைகள் பொய் சொல்லமாட்டார்கள் என்று நினைத்து குட்டி முதலைகளிடம் ஏன் அப்படி சொல்லுறீங்க என்று கேட்டது, அதற்கு குட்டி முதலைகள் “இன்று காலையில் எங்க அம்மா, பக்கத்து வீட்டு பாட்டியிடம் இன்று எங்க வீட்டிற்கு கபீஷ் குரங்கு வருது, அதான் விருந்து தயார் ஆகுது, பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மயங்கியப் பின்பு அதன் இதயத்தை சாப்பிட போகிறேன், இன்று என்னால் உங்களிடம் கதை பேச நேரமில்லை” என்று பேசியதை நாங்க கேட்டோம்.

“மாமா, உங்க இதயத்தை சாப்பிட்டா, நீங்க செத்து போக மாட்டீங்களா?” என்று கவலையாக கேட்டது, அதற்குள் கபீஷ் குரங்கு பிரச்சனையை சமாளிக்க தயார் ஆகிவிட்டது. குட்டி முதலைகளைப் பார்த்து “குழந்தைகளா, நீங்க ரொம்ப நல்லவங்க, நான் இன்று என் இதயத்தை இங்கே கொண்டு வரவில்லை, அதனால் பிரச்சனை இல்லை, பயப்பட வேண்டாம், வாங்க விருந்து சாப்பிடலாம்” என்றது.

கம்சனும், அதன் மனைவியும் அறுஞ்சுவையான விருந்து படைத்தார்கள், கபீஷீம் கவலைப்படாமல் சாப்பிட்டது, இறுதியாக பாயசம் கொண்டு வைக்க அதை கபீஷ் தொடவில்லை.

கம்சனின் மனைவி கபீஷை பார்த்து “இந்த பாயாசம் ரொம்ப சுவையானது, அதில் பாதாம், பிஷ்தா, முந்திரி, திராட்சை, நெய் எல்லாம் போட்டு செய்திருக்கிறேன், சாப்பிடுங்க” என்றது.

உடனே கபீஷ் “என்னை விட என் இதயத்திற்கு தான் பாயாசம் ரொம்ப பிடிக்கும், இன்றைக்கு பார்த்து என் இதயத்தை கொண்டு வரவில்லையே, நேற்று இரவு பெய்த கடும் மழையில் நானும் என் இதயமும் நனைந்து விட்டோம், நனைந்த இதயத்தை காயப்போடவே மரத்தில் தொங்க விட்டு வந்தேன், நீ காலையில் வந்த போது கூட நான் காயப்போடுவதை பார்த்திருப்பாயே?” என்று அப்பாவியாக சொன்னது.

குட்டி குழந்தை முதலைகளும் “ஆமாம் அப்பா, மாமா இங்கே வந்ததும் எங்க கூட பேசும் போது கூட அவர் இதயத்தை கொண்டு வரவில்லை, கொண்டு வந்திருந்தால் இராமர் சீதையை காட்டியிருப்பேன்னு சொன்னாங்க, பரவாயில்லை அடுத்த முறை கண்டிப்பாக கொண்டு வருவதாக சொல்லியிருக்காங்க”.

கபீஷ் உடனே கம்சனைப் பார்த்து “நண்பா, உன் குழந்தைகள் மிகவும் ஆர்வமாக இருக்காங்க, மேலும் என் இதயமும் பாயாசம் சாப்பிட ஆசைப்படும், வேண்டும் என்றால் நாம் இருவரும் போய், மரத்தில் இருக்கும் இதயத்தை கொண்டு வரலாமே, எப்படி வசதி?” என்று கேட்டது.

உடனே கம்சன் தன் மனைவியை பார்க்க, பெண் முதலை, சீக்கிரமாக போயிட்டு வாங்க என்று கண் சிமிட்டு சொன்னது.

உடனே கம்சன் கபீஷ் குரங்கை தன் முதுகில் ஏற்றி கபீஷ் வசிக்கும் மரத்தின் அருகே இறக்கி விட்டது, உடனே கபீஷீம் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது.

கீழே கம்சன் காத்திருந்தது, ஆனால் கபீஷோ அதே இடத்தில் அமர்ந்திருக்க “ஏன் நண்பா, உன் இதயத்தை இன்னமும் எடுக்கவில்லை, நேரமாகிறது வா, வீட்டிற்கு போகலாம்” என்றது.

உடனே கபீஷ் “ஏய் முட்டாள் முதலை நண்பா! எங்கேயாவது, யாராவது தன் இதயத்தை உடலில் இருந்து பிரித்து எடுக்கப் பார்த்திருக்கிறாயா, இதயத்தை எடுத்த உடனே இறந்து போயிடுவாங்கன்னும் உனக்கு தெரியாதா? நண்பன் என்றும் கூட பார்க்காமல் என் இதயத்தை உன் மனைவி சாப்பிட என்னை அழைத்து சென்றாயே, இதுவா நட்பு. எந்த நிலையிலும் கை விடாமல் காப்பது தானே நட்பு, எனக்கு கெடுதல் செய்ய நினைத்த நீ இன்று முதல் எனக்கு நண்பன் கிடையாது, இனிமேல் என்னிடம் பேசாது, இங்கே வராதே, வந்தால் உன் தலையில் பெரிய கல்லாக பார்த்து தூக்கிப் போட்டு கொன்று விடுவேன்” என்று ஆத்திரமாக கூறியது.

முட்டாள் கம்சன் முதலையும் மனம் நொந்து போனது, தன் அவசர புத்தியால் தனத்தால் நல்ல நண்பனை இழந்து விட்டோமே. மனைவி பேச்சை கேட்டு நல்ல நட்பை இழந்து விட்டோமே, எத்தனையோ நாட்கள் கஷ்டப்பட்டு கிடைத்த நட்பு, ஒரு நாளில் வீணாகி விட்டதே, என்று மனம் வருந்தி கபீஷிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, சோகமாக வீட்டிற்கு திரும்பியது.

இனியும் இயற்கைக்கு மாறாக நட்பு பாராட்டக்கூடாது, தீய எண்ணம் படைத்தவர்களோடு சேரக்கூடாது, அவ்வாறு செய்தால் என்றாவது ஒரு நாள் ஆபத்தாக முடியும் என்பதை அறிந்த கபீஷ் மீண்டும் அந்த தவற்றை செய்யவில்லை, மகிழ்ச்சியாக வாழ்ந்தது.

Wednesday, November 10, 2010

நந்தனின் புத்திச்சாலித்தனம்

பொன்னி வளநாடு என்ற நாட்டை குஷன் என்ற மன்னன் ஆண்டு வந்தார். இவரது ஆட்சியில் மக்களின் செழிப்புக்கு குறையேதுமில்லை.

மன்னன் குதிரைகள் மீது அதிக பற்று வைத்திருப்பதால் அவரை "குதிரை பைத்தியம்' என்று மக்கள் அழைத்தனர்.

உலகில் எந்த மூலையில் அழகான, ஆரோக்கியமான குதிரைகள் இருப்பதாக அறிந்தாலும் உடனே ஏகப்பட்ட பணத்தை செலவழித்து அக்குதிரைகளை வாங்குவார். அரண்மனையில் குதிரைகளுக்கு என்றே தனி இடம் அமைத்தார் மன்னர். தனக்குப் பிடித்த குதிரை மீது சவாரி செய்து மகிழ்வது அவருடைய பொழுது போக்கு.

குதிரைப் பித்து பிடித்து அலைவதால் மன்னனுக்கு ஆட்சிப் பொறுப்பை சரியாக கவனிக்க முடியவில்லை. எனவே, அமைச்சர் குணாளன் அனைத்தையும் கவனித்து வந்தார். மன்னனும் அமைச்சரிடம் அதிக பொறுப்புகளை வழங்கிவிட்டு குதிரைகளை பராமரிப்பதில் முழு கவனத்தை செலுத்தி வந்தார்.

அரசன் அதிக பொறுப்புகளை அமைச்சர் குணாளனுக்கு வழங்கி உள்ளதை கண்டு பலர் கவலைப்பட்டனர். அமைச்சரோ தனக்கு கிடைத்த பதவியை வைத்துக் கொண்டு தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டே இருந்தார்.
அமைச்சரின் சில செயல்களை கண்ட அரசனுக்கும் கவலையும் ஆத்திரமும் ஏற்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொறுமையுடன் அடக்கிக் கொண்டு ஒன்றும் தெரியாதவர் போல நடித்துக் கொண்டிருந்தார்.

அரசனே தன்னை கவனிக்கவில்லை என்ற உணர்வால் மேலும் கர்வத்துடன் செயல்படத் தொடங்கினார் அமைச்சர்.

அரசனின் குதிரைப் பித்து அதிகரித்துக் கொண்டே போனது. யார் குதிரைகளை விற்க வந்தாலும் வாங்காமல் இருப்பது இல்லை. அரசனின் குதிரைப் பித்து பற்றி கேள்விப்பட்டு ஏகப்பட்ட குதிரை வியாபாரிகள் அரண்மனை நோக்கி வந்து கொண்டே இருந்தனர். அமைச்சர் குணாளனின் போக்கு எப்படி என்பதை உளவாளிகள் மூலம் கண்காணித்து வந்தார் அரசர்.

அரசனுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய உளவாளிகள் அளித்த தகவல் அரசனை திடுக்கிட வைத்தது. அமைச்சர், நாட்டு பணத்தை பெருமளவில் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார். குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தார். தனக்கு கிடைத்த தகவல்கள் நிஜம்தானா என்பதை நேரில் பார்த்து அறிந்தார் அரசன். எப்படியாவது அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்.

அரசரின் கண்காணிப்பு பற்றி எதுவும் அறியாத அமைச்சர் தன்னை அறிஞன் என்று அடிக்கடி பெருமையுடன் கூறுவதுண்டு. இவர் அறிவுக்கு ஒரு சோதனை வைத்து அமைச்சர் பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்று முடிவு செய்தார் அரசர்.


ஒரு நாள் வழக்கம் போல் அரண்மனை தர்பாரில் அமர்ந்து இருந்தார் அரசர்.
அப்போது சிப்பாய் ஒருவன் வந்து பணிவுடன் வணங்கிவிட்டு, ""மன்னா, தங்களை காண அரபு நாட்டில் இருந்து ஒரு குதிரை வியாபாரி வந்திருக்கிறார். அவர் தங்களை காண விரும்புகிறார்,'' என்று கூறினார்.

குதிரை பித்தனான அரசன் அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். ""உடனே அழைத்து வா,'' என்று கட்டளையிட்டார் மன்னர். அதை கேட்டு அமைச்சர் முகம் ஆத்திரத்தால் கறுத்துவிட்டது. அரசர் அதை கவனித்தார்.

அரபு வியாபாரி அரசர் முன் சென்று பணிவுடன் வணங்கினார். ""மன்னா, என்னிடம் இரண்டு பெண் குதிரைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை மட்டும் தங்களுக்கு விற்க விரும்புகிறேன்,'' என்றார் வியாபாரி.

""ஏன் இரண்டையும் எனக்கு விற்க கூடாது?'' என்று கேட்டார் மன்னர்.

""மன்னா, மன்னிக்கவும், ஒரு குதிரை ஏற்கெனவே ஒருவருக்கு அளிப்பதாக வாக்கு கொடுத்துவிட்டேன். வார்த்தையை மீறுவது தவறு அல்லவா?'' என்றார் வியாபாரி.

""சரி ஆகட்டும்... நான் உடனே குதிரையை பார்க்க வேண்டும்,'' என்று கூறிவிட்டு அரண்மனை தோட்டத்துக்கு நடந்தார் அரசர். அமைச்சரும் வெறுப்புடன் அரசரை பின் தொடர்ந்து சென்றார்.

குதிரைகளை கண்ட அரசர் வியப்படைந்தார். ""என்ன அழகு? என்ன ஆரோக்கியம்! வியாபாரி இந்த இரண்டையும் எனக்கு தருவதில் ஏதாவது மாற்றம் உண்டா?'' என்று மீண்டும் கேட்டார்.

""மன்னிக்க வேண்டும் மகாராஜா,'' என்று தலைகுனிந்தபடி கூறினார் வியாபாரி.

""மன்னா, இந்த குதிரைகளில் ஒன்று தாய், மற்றது மகள். இவைகளில் யார் தாய்? யார் குட்டி? என்பதை தங்களால் கூற முடியுமா?'' என்றார் வியாபாரி.

இது என்ன சோதனை? அரசர் எவ்வளவு முயன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை.

""அமைச்சரே, தாங்கள் அறிஞர் ஆயிற்றே... இந்த குதிரைகளில் தாய் எது, சேய் எது என்று கூறுங்கள்,'' என்றார் மன்னர்.

இவ்வளவுதானே? என்று ஏளனமாக கேட்டபடி குதிரைகளை நெருங்கினார் அமைச்சர். அவர் இரு குதிரைகளையும் மிகவும் உன்னிப்பாக கவனித்தார்.
ஆனால், எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அமைச்சர் குழப்பமடைந்தார். என்ன செய்வது என்று அறியாமல் தவித்தார். அத்தோடு நில்லாமல், "மன்னா! என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நம் நாட்டில் யாராலும் அதை கண்டுபிடிக்க முடியாது, அப்படி யாராவது கண்டுபிடித்தால் நீங்க என்ன பரிசு கொடுத்தாலும் எனக்கு சரியே" அதை கேட்ட அரசர் மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.

அடுத்த நாள் நாடு முழுவதும் ஒரு அறிவிப்பு வந்தது. "அரண்மனையில் இரண்டு பெண் குதிரைகள் உள்ளன. இவைகளில் தாய் எது, குட்டி எது என்பதை கண்டுபிடித்து கூறுபவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி கவுரவிக்கப்படும்,' என்ற செய்தி கேட்டு அமைச்சர் திடுக்கிட்டார்.

அரசு விளம்பரம் பார்த்து ஏகப்பட்டவர்கள் போட்டிக்கு முன் வந்தனர். ஆனால், யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. விளம்பரம் பார்த்த கிராமத்து இளைஞன் நந்தன் அரண்மனைக்கு சென்று தன்னால் குதிரைகளில் தாய் எது, சேய் எது என்று கூற முடியும் என்றான். ""ஆகட்டும்!'' என்று அனுமதி அளித்தார் மன்னர்.

குதிரைகளை நதிக்கரைக்கு கூட்டி வரும்படி கேட்டுக் கொண்டான் நந்தன். உடனே வியாபாரி குதிரைகளை ஆற்றங்கரைக்கு ஓட்டிச் சென்றார்.

இளைஞன் நந்தன் இரு குதிரைகளையும் ஆற்று தண்ணீரில் தள்ளினான்.

தண்ணீரில் விழுந்த குதிரைகள் நீச்சலடிக்கத் தொடங்கின. நெடுநேரம் அவை நீச்சலடித்தன. அப்போது ஒரு குதிரையின் கால்கள் தள்ளாடின. அதனால் தொடர்ந்து நீச்சலடிக்க முடியவில்லை. அதை கவனித்த மற்ற குதிரை தொடர்ந்து நீந்துவதை விட்டு விட்டு தத்தளித்த குதிரைக்கு உதவி செய்வது போல் அதை கரை நோக்கி தள்ளியது.

அதை கண்ட இளைஞன் நந்தன், ""மன்னா, தத்தளிப்பது குட்டி, உதவுவது தாய்,'' என்று உரக்க கத்தினான். அதைக் கேட்டு அரசன் வியப்படைந்தார்.

இளைஞனின் புத்திசாலித்தனத்தை அனைவரும் பாராட்டினர்.

அமைச்சர் மட்டும் தலை குனிந்து நின்றார். அரசர் அறிவித்தபடி நந்தன், கலகபுரி நாட்டுக்கு அமைச்சர் ஆனான். அமைச்சர் குணாளன் மாஜி அமைச்சர் ஆகிவிட்டார். நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நந்தனும் அரசனை திருத்தி, நல்ல படியாக நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் மாற்றினார்.

Tuesday, November 9, 2010

முல்லாவும் முரட்டு தளபதியும்

நம்ம முல்லா நஸ்ருதீன் அவர்கள் ஒருமுறை அரச சபையில் பக்கத்து நாட்டைச் சேர்ந்த அறிவாளிகளுடன் போட்டி போட்டு வென்று, தன் நாட்டின் மானத்தை காத்தார், அதனால் மகிழ்ந்த மன்னர் முல்லாவுக்கு இரண்டு மாடி வீட்டை அன்பளிப்பாக கொடுக்க வந்தார்.



அப்போ முல்லா சொன்னார் “மன்னரே! இப்போ நானும் என் மனைவி மட்டுமே இருக்கிறோம், எங்களுக்கு ஏன் இரண்டு மாடி பங்களா, தேவைக்கு அதிகமாக எதை வைத்திருந்தாலும் ஆபத்து, எனவே கீழ் பாகத்தை நான் எடுத்துக் கொள்கிறேன், மேல் பாகத்தை வேண்டும் என்றால் நம்ம படைத்தளபதி அவர்களுக்கு கொடுக்கலாமே என்றார்.

படைத்தளபதி, சில நாட்களுக்கு முன்பு தான் எதிரி நாட்டைச் சேர்ந்த கொள்ளைக்காரர்களை பிடித்து வந்தார்.

மன்னரும் அவருக்கு பரிசு கொடுப்பதாக சொன்னார், பின்னர் மறந்து போயிட்டார், தளபதிக்கும் கேட்க பயம்.

, முல்லா சொல்லி மன்னர் சேனாதிபதி மன்னர் முல்லாவுக்கு பங்களாவின் கீழ் பாகத்தையும், தளபதிக்கு மேல் பாகத்தையும் அன்பளிப்பாக கொடுத்தார்.

படைத்தளபதிக்கு ஏற்கனவே முல்லா மீது கோபமுண்டு, பைத்தியக்காரத் தனமாக ஏதோ எதோ பேசினால் மன்னர் மகிழ்ந்து பரிசு கொடுக்கிறார், நாமோ உடல் வருந்த கடுமையாக போராடி எதிரிகளையும், கொள்ளையர்களையும் விரட்டுகிறோம், ஆனால் மன்னர் பரிசு தரவில்லையே என்ற வருத்தம் கொண்டார். ஏற்கனவே தளபதி முரட்டு ஆசாமி, யாரையும் மதிக்க மாட்டார். இப்போ இருவரும் ஒரு பங்களாவில். முல்லாவின் மனைவி அவரைப் போல் அமைதியானவர், தளபதியும் மனைவி சொல்லவே வேண்டாமே.

மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பார்.
அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.
மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும். முல்லாவின் மனைவி மேலே சென்று “நீங்க கீழே வந்து எங்க வீட்டில் மாவு இடிக்கலாமே, ஏன் மேலேயே இடிக்கிறீங்க, நானும் உங்களுக்கு உதவுகிறேன்” என்றார். ஆனால் தளபதியின் மனைவி அதை ஏற்கவில்லை.

முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.

“இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்போ வேண்டும் என்றாலும், எப்படி வேண்டுமானாலும், மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? “ என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.

மறுநாள் தூங்கிக் கொண்டிருந்த தளபதி, தன் கட்டடம் அதிர்வதைக் கண்டு எழுந்து கீழே எட்டிப் பார்த்தார், அங்கே முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.

“கீழே என்ன செய்கிறாய் ? “ என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.

“கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக சின்னதாக ஒரு வீட்டைக் கட்டத் தீர்மானித்திருக்கிறேன் “ என்றார் முல்லா.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி “என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? “ என்று கோபத்தோடு கேட்டார்.

“மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை, நீர் கீழ்வீட்டைப் பற்றி என்றைக்காவது கவலைப்பட்டீரா?” என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.

அதைக் கேட்டதும் பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார். “நீர் பெரிய அறிவாளி என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன், அதனால் தான் மன்னர் உம்மை ரொம்பவே நேசிக்கிறார், நான் உங்க மீது பொறாமை கொண்டேன், என்னை மன்னிக்கவும், நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்” என்றார் தளபதி.

“நான் எப்போதுமே எல்லோருக்கும் நண்பன்தான் “ என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.

Monday, November 8, 2010

சோழ நாட்டு வீரச்சிறுவன்

சோழநாட்டை குலோத்துங்கன் என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். இவர்தான் "சுங்கம் தவிர்த்த சோழன்' என்று வரலாற்றில் பேசப்படும் மன்னர். சோழ மரபிற்கு ஒரே வாரிசு.

குலோத்துங்கன் ஆட்சியில் கல்வியில் சிறந்த புலவர்கள் அரசனை நாடிப் பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றனர். அதே போல் வீரர்கள் தங்கள் வீரத்தைக் காட்டிப் பரிசுகள் பல பெற்றனர். நாடெங்கிலும் திருவிழாக்கள் கோலாகலமாய் நடந்தன. மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி நடத்தி வந்தார்.

அக்காலத்தில் கடோத்கஜன் என்ற மாளவ நாட்டு மல்லன் ஒருவன் நாடெங்கும் போரிட்டு வெற்றிக்கொடி நாட்டி வந்தான். வட இந்தியாவில் பல மல்லர்களை ஜெயித்த அவன் தென்னகத்திற்கும் விஜயம் செய்தான்.


மற்போரில் மட்டுமல்லாமல், வில்வித்தைகளிலும், வாட்போரிலும் வாகை சூடிவந்தான். அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வீரர்கள் நடுநடுங்கினர்.

அவனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற வீரர்களின் தலைகளை மொட்டை அடித்து அவர்களைத் தன் அடிமைகளாக்கினான். தான் செல்லும் தேசங்கள் தோறும் அவர்களைப் பரிவாரங்களாக அழைத்துச் சென்றான். அதனால் சிறந்த வீரர்களும் கூட அவனை எதிர்க்க அஞ்சினர்.

சோழநாட்டிற்கு வந்த அவன் மன்னன் குலோத்துங்கனைக் கண்டு ""என் சவாலை ஏற்கக் கூடிய வீரர்கள் உம் நாட்டில் உள்ளனரா?'' என்று ஆணவத்துடன் கேட்டான்.

மன்னன் பறை முழங்கி வீரர்களுக்கு இச்செய்தியை அறிவித்தார்.
சோழநாடு வீரத்தில் என்றும் சோடை போனதில்லை. வீரர்கள் பலர் திரண்டனர். விற்போருக்கும், மற்போருக்கும் நாட்கள் குறிக்கப்பட்டன.
அன்று அரண்மனை மைதானத்தில் மன்னர் முன் ஆயிரக் கணக்கானோர் கூடினர். போட்டி ஆரம்பமாயிற்று.

முதல் நாள் வாட்போர்—
பத்துக்கும் மேற்பட்ட சோழநாட்டு வீரர்கள் கடோத்கஜனிடம் வரிசையாகத் தோற்றனர். அவர்களால் பத்து நிமிடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.
தோற்ற வீரர்களை கடோத்கஜனின் ஆட்கள் கூடாரத்திற்கு இழுத்துச் சென்று உடனுக்குடன் மொட்டை போட்டு அவமானப்படுத்தி அடிமையாக்கினர்.

மறுநாள் மற்போர்—
சோழநாட்டின் மானத்தைக் காக்க வீரன் ஒருவன் இன்றாவது வருவானா என்று மன்னன் ஏங்கிக் கொண்டிருந்தார்.

கடல் அலையெனத் திரண்டிருந்த கூட்டத்தில் சிங்கமெனக் கர்ஜித்தான் கடோத்கஜன். அவனது திண்ணிய தோள்களும், விம்மிப்புடைத்த மார்பும், வலிமைபொருந்திய கால்களும், தினவெடுத்த கைகளும், அனல்கக்கும் பார்வையும் அனைவரையும் அச்சமுறச் செய்தன.

கோதாவில் நின்று கொக்கரித்த அவனை எதிர்க்க யாரும் முன்வரவில்லை.

""மன்னா! உம்மிடம் மலைபோல் படையிருந்தும் என்னை எதிர்க்க எந்த மல்லனும் வரவில்லை. பார்த்தீர்களா என பராக்கிரமத்தை?'' என்று இறுமாப்புடன் சொன்னான்.

மன்னன் வெட்கித் தலைகுனிந்தான்.

அதே நேரத்தில்—

""இதோ, நானிருக்கிறேன்,'' என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.
அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

பத்து வயது சிறுவன் ஒருவன் திறந்த மார்புடன் வெளியே வந்தான்.

""ஏய் சிறுவனே, நீயா எனக்கு எதிரி? மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன். உயிர் பிழைக்க ஓடிவிடு,'' எனக் கர்ஜித்தான் கடோத்கஜன்.

என்ன ஆச்சரியம்! கண் சிமிட்டும் நேரத்தில் பறந்து சென்ற சிறுவன், மல்லனின் தோள்களில் அமர்ந்து தன் வலக்கையை நீட்டி அவன் கழுத்தில் மின்னலாய் ஒரு வெட்டு வெட்டினான். அவ்வளவுதான்... கடோத்கஜனின் கழுத்து நரம்பொன்று சுளுக்கி வலப்பக்கம் 45 டிகிரி கோணத்தில் முகம் பின்புறம் திரும்பிக் கொண்டது. அவனது விழிகள் சுழன்றன. கற்சிலையாய் அசைவற்று நின்றான்.

தோள்களிலிருந்து கீழே குதித்த சிறுவன் மல்லனின் இடது காலை வாரி அவனை மண்ணைக் கவ்வச் செய்தான்.

கூட்டம் ஆரவாரித்தது. சிறுவனைத் தலை மேல் துõக்கி வைத்துக் கூத்தாடியது.

யாரிந்தச் சிறுவன்?

உடலின் நரம்புகளின் ஓட்டம் அறிந்து இன்ன நரம்பைத் தட்டினால் இப்படி ஆகும் என்று கூறும் வர்ம சாஸ்திரக் கலை நிபுணர் வரகுணபதியின் மகன் கபிலன் தான் அவன்.

கடோத்கஜினின் மனைவியும், மக்களும் மன்னனிடம் மன்னிப்புக் கேட்க, சிறுவன் கபிலன் கழுத்து நரம்பில் மற்றுமொரு தட்டு தட்டிவிட்டு தலைக்கோணலைச் சரியாக்கினான்.

கடோத்கஜன்வெட்கித்தலைகுனிந்தான். அவனுடைய ஆணவம் அன்றோடு அழிந்தது. தான் அடிமைபடுத்தி இருந்த ஆட்களை எல்லாம் அன்றே விடுதலை செய்து அனுப்பி வைத்தான்.

Sunday, November 7, 2010

ஜெரி சொன்னா கேட்கணும்

ஒரு முறை புளியங்குடி காட்டில் மழை பெய்யாததால் மரம், செடி, கொடிகள் எல்லாம் வாடி கருகின. நீர் நிலைகள் வற்றி விலங்குகள் தவித்தன.

பறவைகள் நான்கு திக்கிலும் பறந்து சென்று செழிப்பான இடத்தைத் தேடின.
அப்படிச் சென்ற பறவைகளில் ஒரு ஜோடி கழுகுகளும் இருந்தன.

இரண்டு கழுகுகளும் வெகுதுõரம் பறந்து தாங்கள் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுப் பொரித்து குதுõகலமாக குடும்பம் நடத்தத் தகுதியான மரம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வரும் பொழுது, ஒரு தோப்பு அவற்றின் பார்வையில் பட்டது.

தோப்பில் நிறைய மரங்களிருந்தன. அவற்றில் ஒரு மரம் கிளையுடன் செழித்து வளர்ந்திருந்தது. ஆனால், அது வயதான மரம். அந்த மரத்தில் யாருமே கூடு கட்டவில்லை, ஏன் என்றும் தெரியவில்லை.

யாருமே இல்லாததால் தாங்களே முழுமரத்தையும் உபயோகிக்கலாம், வேறு யாரையும் இனிமேல் அனுமதிக்கக்கூடாது என்று நினைத்து, அம்மரத்தில் கூடு கட்டலாமென்று இரு கழுகுகளும் தீர்மானித்தன. அதன்படியே பலமான குச்சிகளைக் கொண்டு வந்து கூட்டைக் கட்டின. கூடு பலமாக, பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்டு அங்கு முட்டை இட்டு, குஞ்சு பொரிக்கலாமென்று அவை பேசிக் கொண்டன.

அப்போது அம்மரத்தடியில் வளை தோண்டி வசிக்கும் ஜெரி எலி ஒன்று வெளியே வந்து, மேலே கூடு கட்டிக் கொண்டிருக்கும் கழுகுகளைப் பார்த்தது. அதன் முகத்தில் கவலை குடி கொண்டது.

""கழுகுகளே... மேலே என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டது ஜெரி.

""கூடு கட்டுகிறோம்!'' என்றது ஆண் கழுகு.

""இந்த மரத்திலேயா தங்கப் போறீங்க?'' என்று கேட்டது ஜெரி.

""ஆமாம்! அதற்காகத் தான் கூடு கட்டுகிறோம். தங்குவதோடு, முட்டையிட்டு குஞ்சும் பொரித்துக் கொள்ளப் போகிறோம்!, குஞ்சுகள் வந்தப் பின்பு அவைகள் இம்மரத்தின் மேலேயே கூடு கட்டும், இனிமேல் இது எங்களுக்கு மட்டுமே சொந்தமான மரம்'' என்றது பெண் கழுகு.

""நீங்கள் கூடு கட்டி குஞ்சு பொரிப்பது பற்றி மிகவும் சந்தோஷம்... ஆனால்?'' என்று இழுத்தது ஜெரி எலி.



""என்ன ஆனால் என்று இழுக்கிறாய்?'' என்று கேட்டது ஆண் கழுகு.

""நீங்கள் வேறு ஒரு மரத்தில் கூடு கட்டக்கூடாதா?''

""ஏன் இந்த மரத்துக்கு என்ன?''

""இந்த மரம் வயதான மரம். நான் இதன் கீழ் பூமியில் வளை தோண்டி வசிக்கிறேன். அதனால் இம்மரத்தின் வேர் எப்படிப்பட்டது என்று எனக்குத் தெரியும். இம்மரம் பார்ப்பதற்கு பெரியதாக இருக்கிறதே தவிர, இதன் வேர்கள் எல்லாம் பூமியில் பலம் குன்றியுள்ளன. இம்மரம் பலமான காற்றை தாங்குமா என்பது சந்தேகம்தான். அதனால் தான் சொல்கிறேன்!'' என்றது ஜெரி.

""நாங்கள் இங்கேதான் கூடு கட்டி குஞ்சு பொரித்து இருப்போம்... அற்ப ஜீவன் நீ...! யோசனை கூறவோ, அறிவுரை கூறவோ உனக்கு என்ன தகுதி இருக்கிறது?'' என்றது ஆண் கழுகு.

""என்னமோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். கேட்டால் கேளுங்கள்; கேட்காவிட்டால் போங்கள்!'' என்றது ஜெரி.

""அதிகமாகப் பேசினால், உன்னையே கொத்தி சாப்பிட்டு விடுவேன்...! வாயை மூடிக் கொண்டு போ!'' என்றது பெண் கழுகு. பேசியதோடு இல்லாமல் எலியின் மீது பாய இரண்டு கழுகுகளும் ஆக்ரோஷமுடன் "சர்'ரென்று பறந்து வந்தன.

வளைக்குள் பாய்ந்து சென்று அவைகளிடமிருந்து தப்பிவிட்டது ஜெரி.
கூட்டை பலமாக கட்டியப்பின்பு மூன்று முட்டையிட்டு குஞ்சு பொறிக்க காத்திருந்தன, சில நாட்களில் மூன்று கழுகு குஞ்சுகள் முட்டையை விட்டு வெளியில் வந்தன. ஆண் கழுகும், பெண் கழுகும் குஞ்சு கழுகுகளைப் பார்த்து, பார்த்து மகிழ்ந்தன.

சில நாட்கள் சென்றன. ஒரு நள் மாலையில் இரு கழுகுகளும் உணவு தேட வெளியே சென்றன, அப்படியே வெகுதூரம் போய் விட்டன.

அப்போ முதலில் லேசாக ஒரு காற்று வீசிற்று. பிறகு அது கொஞ்சம் பலமானது. பிறகு இன்னும் கொஞ்சம் பலமானது; அப்புறம் மிக மிக பலமாகி புயலாக உருவெடுத்தது.

புயல் வரத்தொடங்கியதை அறிந்த இரு கழுகுகளும் வேகமாக தங்கள் கூட்டிற்கு வர நினைத்தன, ஆனால் காற்றில் அவற்றால் பறக்க முடியவில்லை. அன்று இரவு முழுவதும் ஒரு மலைக்குகையில் பதுங்கி இருந்தன.

மறுநாள் காலையில் வேகவேகமாக தங்கள் குஞ்சுகள் இருக்கும் மரத்திற்கு வந்து பார்த்த போது, அவற்றின் இதயமே நின்று போய்விட்டது.

ஆமாம், அங்கே இருந்த அந்த பெரிய வயதான மரம், அடியோடு சாய்ந்து விழுந்து கிடந்தது, மரக்கிளைகள் எல்லாம் நொறுங்கி தூள் தூளாகியிருந்தது, அதை பார்த்த இரு கழுகுகளும் தங்கள் 3 குஞ்சுகள் இறந்து போய் விட்டதே, சின்ன எலி அன்றே சொன்னது அதை கேட்காமல் தங்கள் அருமை குஞ்சுகளை இழந்து விட்டோமே என்று கதறி அழுதன.

அப்போ அங்கே வந்த ஜெரி எலி "இப்போ அழுது என்ன பயன், அன்றே நான் சொன்னதை கேட்டிருந்தால் இப்படி நடந்திருக்குமா, என் உருவத்தை பார்த்து, நான் சொன்ன நல்ல விசயத்தை ஏளனம் செய்தீங்களே!" என்றது.

உடனே கழுகுகள் "உண்மை தான், எங்களை மன்னியுங்கள், உங்கள் பேச்சை கேட்காததால் எங்கள் குழந்தைகள் இறந்து போய்விட்டன" என்றன.

உடனே ஜெரி "உங்க குழந்தைகள் இறந்து போனதாக யார் சொன்னார்கள்"?

பெண் கழுகு "அதோ அந்த பெரிய மரம் அடியோடு சாய்ந்து கிடக்கிறது, அதன் அடியில் தான் எங்கள் குழந்தைகள் நசுங்கி போயிருப்பாங்க".

ஜெரி "கவலை வேண்டாம் என் அருமை நண்பர்களே! காற்று பலமாக அடிக்கத் தொடங்கியதும், நான் என் குரங்கு நண்பன் கபீஷிடம் சொல்லி, உங்கள் குழந்தைகளை அருகில் இருக்கும் மலைக்குகையில் பத்திரமாக பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறேன், அங்கே தான் அனைத்து பறவைகள், விலங்குகள் இருக்கின்றன, வாங்க போய் உங்க அருமை குழந்தைகளை பார்க்கலாம்" என்றது.


அதைக் கேட்ட இரு கழுகுகளுக்கும் ஆனந்த கண்ணீர், இருவரும் ஜெரியிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டு, நன்றியை சொன்னார்கள்.


உடனே மலைக்குகைக்கு சென்று அங்கே கபீஷிக்கும் நன்றி சொல்லி, தங்கள் குழந்தைகளை கட்டி பிடித்து முத்தமிட்டு மகிழ்ந்தார்கள். அன்று முதல் அந்த கழுகுகளும், நம்ம ஜெரி எலியாரும், கபீஷ் குரங்காரும் நல்ல நண்பர்கள்.