Saturday, November 20, 2010

குழந்தை இயேசுவும், கொடியவன் யூதாஸீம்

ரோமாபுரியில் பிரபல இளம் ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் எதை வரைந்தாலும் தத்ரூபமாக வரைவார். ஒரு நாள் அவர் இயேசு கிருஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை ஓவியமாக வரையலாம் என்று முடிவு செய்தார்.
ஒவ்வொரு நிகழ்ச்சியும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு ஓவியத்தையும் அதற்குப் பொருத்தமான மாடலை வைத்தே ஓவியங்களை வரைந்து வந்தவர்.

ஒரு முறை குழந்தை இயேசுவை ஓவியமாக வரைய அழகான, கலங்கமில்லாத, தெய்வீக அம்சம் பொறுந்திய குழந்தையைத் தேடி பல இடங்களுக்கும் சென்று அலைந்து திரிந்தார்.

முடிவில் ஒரு கிராமத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் அவர் எதிர்பார்ப்புக்கு பொருத்தமான குழந்தை ஒன்று கிடைத்தது. அந்த குழந்தையின் பெற்றோரிடம் தன் எண்ணத்தை சொல்லி, அக்குழந்தையை மாடலாக வைத்து குழந்தை இயேசுவின் ஓவியத்தை சிறப்பாக வரைந்து முடித்தார்.

குழந்தை இயேசுவை வரைந்தப் பின்பு அக்குழந்தையானது பிற்காலத்தில் மிகப் பெரிய பதவிகள் அடையும் என்று ஆசிர்வாதம் செய்து விட்டு போனார்.
அந்த ஓவியரும் நேரம் கிடைக்கும் போது இயேசு காவியத்திற்கு ஏற்ற மாடல்கள் கிடைக்கும் போதும் ஓவியங்களை வரைந்து குவித்தார்.

இப்படியாக இருந்த அவருக்கு வயதும் ஆகி முதுமை அடைந்து விட்டார்.

இவ்வாறு இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைத் தக்க மாடல்களை வைத்து வரைந்து வந்தபோது, இயேசுவானவரை காட்டிக் கொடுத்த "யூதாஸ்' உருவத்தை வரைய வேண்டியிருந்தது. அதற்கு கொடூரமான முகம் கொண்ட மனிதனைத் தேடி அலைந்தார்.

வருஷக்கணக்காகத் தேடியும் ஓவியரால் கொடூர முகம் கொண்ட மனிதனை காண இயலவில்லை.

ஒருநாள் ஒரு சிறைச்சாலைக்கு அருகில் சென்ற போது அங்கே ஒருவனை காவலர்கள் கட்டிப் போட்டு உதைப்பதை பார்த்தார். அவனைக் கண்டதும் ஓவியருக்கு மிக்க சந்தோசம், யூதாஸ் ஓவியத்திற்கு ஏற்ற முகமாக இருக்கிறதே என்று சந்தோசப்பட்டார். பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து, அவனை இந்த முறை மட்டும் மன்னித்து தன்னுடன் அனுப்ப வேண்டினார், அதிகாரியும் சரி என்று சொல்லி அவனை விடுதலை செய்து ஓவியருடன் அனுப்பி வைத்தார்.

பல கொள்ளைகளையும், கொடிய செயல்களையும் செய்த கொடியவன் அவன். வீட்டில் அவனை அழைத்து வந்து தான் ஒரு ஓவியம் செய்ய இருப்பதாகவும், அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நிறைய பணம் தருவதாகவும் சொன்னார். அவனும் ஒத்துக் கொள்ள, ஓவியர் எதிர்பார்த்தபடியே அவனது முகம் கொடூரமாக இருந்ததால், அவனை வைத்து யூதாஸ் ஓவியத்தைத் தத்ரூபமாக வரைந்து முடித்தார்.

ஓவியம் வரைந்து முடித்ததும், திருடன் ஓடி வந்து அந்த ஓவியத்தைப் பார்த்தான், பின்னர் ஓவியரைப் பார்த்து, இது நானா, இத்தனை கொடிய முகமா, ஆமாம் என்னை யாராக வரைந்தீங்க என்று கேட்க, ஓவியர் "தவறாக நினைக்காதே, நான் தேவமைந்தன் இயேசு பிரானை காட்டிக் கொடுத்த யூதாஸாக உன்னை வரைந்தேன்" என்றார்.

அதைக் கேட்டதும் அந்த கொடியவன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது, கதறி கதறி அழுதான். ஓவியருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

நீ எத்தனையோ கொடிய செயல்களை தெரிந்தே செய்திருக்கிறாய், அப்படி இருந்தும் ஏன் அழுகிறாய்?

அப்போ அவன் சொன்னான் "அய்யா! நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது ஒரு ஓவியர் எங்க வீட்டிற்கு வந்து என்னை குழந்தை இயேசுவாக வரைந்தாராம், அதைப் பற்றி என் பெற்றோர் பலமுறை சொல்லியிருக்காங்க, அன்று அப்படி தெய்வாம்சம் மிக்க குழந்தையாக தெரிந்த நான் இன்றோ கொடிய முகத்தை கொண்ட யூதாஸாக உங்களுக்கு தெரிகிறேனே, என்று நினைத்து வருந்துகிறேன்"

உடனே ஓவியருக்கு தாங்க முடியாத அதிர்ச்சி "என்ன, நான் அன்று வரைந்த இயேசுவின் மாடலாக தெரிந்த குழந்தையா நீ, ஏன் இப்படி மாறினாய்" என்று கேட்டார்.

அதற்கு அவன் சொன்னான் "அய்யா! நீங்க தான் அந்த ஓவியரா?, நான் நல்லப்பிள்ளையாகத் தான் இருந்தேன், ஆனால் என் நண்பர்கள் நல்லவர்களாக இருக்கவில்லை, என் பெற்றோர் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் நான் கேட்கவில்லை, கெட்டவர்களோடு நட்பு கொண்டிருந்ததால் நான் அனைத்து வகையான கெட்ட செயல்களை செய்தேன், திருடினேன், குடித்தேன், சூதாடினேன், எளியவர்களை அடித்தேன், பெரியவர்களை நிந்தித்தேன், அதனாலேயே என் மனமும், முகமும் கொடியனாக ஆகிவிட்டது, என்னை மன்னிக்கவும், நான் இத்தனை கொடியவனாக இருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், இனிமேல் நான் நல்லவனாக, உங்களுக்கு உதவியாளனாகவே இருக்க விரும்புகிறேன்" என்றான்.

மனம் திருந்திய அவனை கட்டிப்பிடித்து அரவணைத்தார் அந்த ஓவியர். அதன் பின்னர் ஓவியரிடம் ஓவியங்கள் தயார் செய்வதை கற்றுக் கொண்டு அவருக்கு உதவியாளனாக இருந்து வந்தான்.

குழந்தைகளா! இக்கதையானது நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் நம் நண்பர்கள் நல்லவர்களாக அமையவில்லை என்றால் நம்மால் நல்லவர்களாக இருக்க முடியாது. ஓவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது தெய்வத்தின் குழந்தை, பின்னர் வளர்க்கப்படும் விதமும், சூழ்நிலையும், நண்பர்களும் சேர்ந்தே, நம்மை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் மாற்றுகிறார்கள். எனவே நல்ல நண்பர்களுடன் சேர்ந்திருங்க, யாராவது கெட்டவர் என்று தெரிந்த நிமிடமே அவர்களை விட்டு விலகுங்கள். அப்போ தான் நீங்க சாதனையாளராக முடியும். உங்க பெற்றோரும் பெருமை அடைவார்கள்.

Friday, November 19, 2010

வரும்முன் காப்போம்

தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும்.




அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.
அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் சில மனிதர்கள் அங்கே வந்தார்கள். வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது. குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள். பின்னர் அவர்களில் ஒருவர் “இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம். பேசாம இங்கே நாளை வந்து வலையை விரிப்போம், மாட்டிக் கொள்ளும் மீன்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்” என்றார்.

மற்றவரும் “ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே” என்றார்.


இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது, உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.


ராமு எப்போவும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்த மீன், மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்கு போகலாம். சில காலம் போனபின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது.

ராமுவின் நல்ல யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. "அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாக பயப்படுகிறாய்" என்றன.

ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது. ஆனால் சோமு, தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லி விட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது.
மறு நாள் காலையில் சோமு, தாமு இருவரும் கூடி பேசினார்கள், மீன் பிடிப்பதாக சொன்னவர்களை காணவில்லை, சும்மா பேச்சு சொன்னதை நம்பி ராமு வேற குளத்திற்கு போனது முட்டாள்தனம் என்று கேலி செய்தன.
சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள். அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு “அய்யோ கடவுளே!, ராமு அப்போவே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே” என்று புலம்பியது.
ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, “ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம்” என்றது.

சோமு கொஞ்சம் கொழு கொழு மீன், அதற்கு பயம் வந்து விட்டது, அதற்குள் மீனவர்கள் வலை வீச, தாமூ ஓடி ஒளிந்துக் கொண்டது. சோமு மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்க படாத பாடு பட்டது, இறுதியில் சோமுவின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்து, வலையில் இருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பி விட்டது. உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல் வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது.

தாமு குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் ஒளிந்துக் கொண்டது, தான் வீரமாக தப்பியதை நினைத்து பெருமைப்பட்டது. அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார், அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது தாமுவை தாக்கியது, தாமு தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது.

சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன்.

வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது, வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமுவோ கொல்லப்பட்டு விட்டது.
குழந்தைகளே! இக்கதையானது நம் அனைவருக்கும் நல்ல பாடம். எந்த விசயத்தையும் வரும் முன்பே யோசிக்க வேண்டும், மழைக்காலம் என்றால் வெளியே செல்லும் போது கையில் குடை இருக்க வேண்டும். தேர்வு வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே அனைத்துப் பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கத் தொடங்கினால் அது பயன் அளிக்காது, எனவே நாம் எப்போவும் வரும்முன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் கவலையின்றி வாழலாம்!

Thursday, November 18, 2010

கிடைத்த சந்தர்ப்பம்!



"ஒரு குளத்தில் கொக்கு ஒன்று வசித்தது. அது அந்த குளத்திலுள்ள மீன்களை பிடித்து தின்று வாழ்ந்தது. அது ஒரே கொக்காக அங்கிருந்ததால் போட்டியாக வேறு எந்த கொக்கும் இல்லை. அதனால் அந்த ஒரு கொக்குக்கே நிறைய மீன்கள் கிடைத்தன. கொக்கும், போதும் போதும் என்னும் அளவுக்கு மீன்கள் சாப்பிட்டு பரம திருப்தியுடன் அங்கு வசித்தது. திடீரென்று ஒரு நாள் பல கொக்குகள் அக்குளத்துக்கு வந்து சேர்ந்தன. குளம் நிறைய மீன்கள் இருப்பதைக் கண்டன. அவ்வளவு மீன்களை ஒரே இடத்தில் பார்த்திராத அவைகள் இஷ்டம் போல மீன்களை பிடித்து சாப்பிட்டன. வயிற்றுக்கு உணவு தாராலாமாக கிடைக்கும் இடத்தை விட்டு, யாராவது செல்வார்களா? எல்லா கொக்குகளும் அங்கேயே தங்கி விட்டன.


வெகு நாட்களாக அக்குளத்திலிருந்த கொக்குக்கு மீன் கிடைப்பது என்பது அரிதாகிவிட்டது. கிடைக்கிற ஒன்றிரண்டு மீன்களும் அதன் பசியை போக்க போதவில்லை. இனி அக்குளத்தை நம்பிக் கொண்டு அங்கேயே இருந்தால், பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் என்று அந்த கொக்குக்கு தெரிந்துவிட்டது. அதனால் அக்குளத்தை விட்டு வேறெங்காவது செல்வதென கொக்கு முடிவு செய்தது. ஏதாவது பெரிய மீனாக சாப்பிட்டால்தான், தன் கொடிய பசி அடங்கும் என்றெண்ணி வேறு நீர் நிலையை தேடி பறக்க ஆரம்பித்தது. அங்கும் வேறு கொக்குகள் வராதிருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டது. வெகு தூரம் காட்டில் பறந்து சென்ற கொக்கு ஒரு நீரோடையைக் கண்டது. அதன் மீன்கள் இருக்கின்றனவா என்று கூட கொக்கு பார்க்கவில்லை. வேறு கொக்குகள் தென்படுகின்றனவா என்று தான் பார்த்தது. நல்லவேளை ஒரு கொக்குக் கூட அங்கு தென்படவில்லை.


நீரோடை ஆழமில்லாமலிருந்தது. அதில் தெளிந்த நீர் பளிங்கு போல் ஓடிக் கொண்டிருந்தது. நீரினடியில் கூழாங்கற்கள் தெரிந்தன. உருண்டு உருண்டு தேய்ந்து தேய்ந்து அவைகள் வழுவழுப்பாகவும், பல நிறங்களுடையதாகவும் இருந்தன. அதன் மீது ஓடிக் கொண்டிருக்கும் நீரோடை நீர், சற்றுத் தொலைவிலுள்ள ஆற்றில் கலந்து கொண்டிருந்தது. ஓடும் நீரை எதிர்த்து நீச்சலடித்துச் செல்வதுதான் மீன்களின் இயல்பு. அந்த ஆற்றில் ஓடை நீர் விழுகிற இடத்தில் ஓடை நீரில் எதிரும் புதிருமாக ஓடிக் கொண்டிருந்தன சின்னச் சின்ன மீன்கள்.



தண்ணீர் அருகே வந்து பார்த்தது கொக்கு. நீரில் மீன்களே நிறைந்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன. எல்லாமே அழகழகான சின்னச் சின்ன மீன்கள். அவைகளை பார்த்ததும் கொக்குக்கு சந்தோஷம் உண்டாயிற்று. நிறைய மீன்கள் உள்ளன என்பதை விட, தனக்கு போட்டியாக வேறு ஒரு கொக்கும் அங்கில்லை என்பதே அதற்கு பெரிய சந்தோஷத்தை அளித்தது. ஓடையில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களை பிடித்து தின்ன எண்ணியது கொக்கு. உடனே அதற்கு முதலில் பெரிய கொழுத்த மீனாக சாப்பிட வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. பறந்து வந்து ஓடையில் நடுவே வந்து ஆடாமல், அசையாமல் ஒற்றைக் காலில் நின்றது கொக்கு. தலையை கீழே சாய்த்து புற்களைப் பார்த்தது.


திடீரென்று ஒரு கொக்கு வந்து நீரில் நிற்கவே, சின்ன மீன்களெல்லாம் அச்சம் கொண்டன. அது தங்களை பிடித்து தின்னவே வந்திருக்கிறது என்பது மீன்களுக்கு தெரிந்து விட்டது. இனி கொக்கின் பார்வையிலிருந்தால் ஆபத்துதான் என்றெண்ணி மூலை முடுக்கிளெல்லாம் சென்று ஒளிந்து கொண்டன. பெரிய மீன் வந்ததும் அதை ஒரே பிடியாக "லபக்' செய்து விடலாம் என கொக்கு அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றது. அது ஒரு பொம்மை நிற்பது போலிருந்தது. ஆனால், அதன் கண்கள் மட்டும் நீரில் பெரிய கொழுத்த மீன் வருகிறதா கண்காணிப்பதிலேயே இருந்தது. ஏதாவது என்று சின்ன மீன்கள் வந்தால் வந்து விட்டு போகட்டும் என்பது போலிருந்தது அது நின்றதைப் பார்த்தால்.


கொக்கு ஆடலாமல், அசையாமல் ஆணியடித்தது மாதிரி நிற்கவே சின்ன மீன்கள் பயம் விலகி தாங்கள் ஒளிந்திருந்த இடத்தை விட்டு வெளியில் வந்து அப்படியும், இப்படியும் நீந்தின. தன் லட்சியம் பெரிய கொழுத்த மீனை பிடித்து சாப்பிடுவதுதான் என்பது போல கொக்கு மவுனமாக ஆடாமல், அசையாமல் அப்படியே நின்றது. அதனால் பயம் தெளிந்து சின்ன மீன்கள் கொக்கின் காலடியிலேயே கூட்டம் கூட்டமாக சுற்றிச் சுற்றி வந்தன.


அவைகளை ஓரக் கண்ணால் கவனித்துக் கொண்டிருந்த கொக்கு, "உங்களை ஆயிரம் மீன்கள் சாப்பிடுவதும் சரி. பெரிய மீனாக ஒன்று சாப்பிடுவது சரி. எனக்கு பெரிய மீன்தான் வேண்டும்!' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது. கூடவே சிறிய மீன்களை பிடிக்க ஆரம்பித்து விட்டால், பெரிய மீன்கள் வராது போய் விடுமோ என்கிற அச்சம் கொக்குக்கு உண்டாயிற்று. சிறியவைகளை பிடிப்பது, பெரிய மீன் பிடிக்க முடியாதபடி செய்து விடும். அதனால் சிறிய மீனை பிடிப்பது நமது லட்சியத்துக்கு சரியானதல்ல என்று தனக்குத்தானே பேசிக் கொண்டது கொக்கு.



உச்சிப் பொழுது கழிந்து மாலை நேரமும் வந்துவிட்டது. அப்போதும் கொக்கு பெரிய மீனை எதிர்பார்த்து ஓடையில் ஒற்றைக் காலில் வெகு நேரம் நின்று கொண்டிருந்தது. ஒரு பெரிய மீன் கூட வரவில்லை. மாலைப் பொழுது மயங்கி இருட்டத் தொடங்கிவிட்டது. கொக்கு அவ்வளவு நேரம் கால் கடுக்க நின்றதுதான் மிச்சம். ஒரு பெரிய மீனும் அதற்கு சாப்பிட கிடைக்கவில்லை. பசியால் அது சோர்ந்து களைத்துப் போயிற்று. பறக்க முடியாமல் பறந்து, மரத்துக்குச் சென்று படுத்துக் கொண்டது. இன்றைக்கு கையில் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிட்டு விட்டு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என நம்பி காத்திருப்பதைவிட கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்வதே வெற்றியை தரும்.

Wednesday, November 17, 2010

கற்பனை கோட்டை!



ஒரு ஊரில் சுந்தரம் என்று ஒருவன் இருந்தான். அவன் மனைவி பெயர் விஜயா. அவர்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் பெயர் ரங்கன். இருவரும் மிகுந்த ஏழை. ஆனாலும் வெட்டிக் கதை பேசுவதில் வல்லவர்கள். கனவுலகத்திலேயே சஞ்சரிப்பவர்கள். உடமை என்று சொல்லிக் கொள்ள அவர்களிடம் சில சட்டிப் பானைகள் தானிருந்தன. ஆனாலும் தினசரி என்ன வியாபாரம் செய்யலாம். என்ன தொழில் செய்யலாமென்று கணவனும், மனைவியும் பேசிக் கொண்டே இருப்பர். ஏதாவது ஒரு தொழில் செய்யலாமென்று தீர்மானிப்பர். உடனே அந்த தொழில் எப்படி விருத்தியாகிறது. எவ்வளவு லாபம் கிடைக்கிறது. தாங்கள் என்னென்ன சுகம் அனுபவிப்பது என்றெல்லாம் வாய் கிழிய பேசி பொழுதை கழிப்பர்.


அதை எல்லாம் அடுத்த வீட்டு ரங்கன் கேட்டுக் கொண்டே இருப்பார். அவருக்கு சிரிப்பு வரும். வெறும் கையால் முழம் போடுகிறார்களே பாவம் என்று எண்ணுவார். ஒரு நாள் கணவன், மனைவி இருவரும் பால் வியாபாரம் செய்வதைப் பற்றி பேச ஆரம்பித்தனர். ""என்னிடம் பணமிருந்தால் பசுக்கள் வாங்குவேன்?'' என்றான் சுந்தரம். ""பசுக்களை மேய்ச்சல் தரைக்கு ஓட்டிப் போய் மேய விடுவேன். அங்கே அவைகள் போடும் சாணத்தை கூடையில் எடுத்து வந்து நம் வீட்டுச் சுவற்றில் வரட்டி தட்டுவேன். அவைகளை விற்று காசு சேர்ப்பேன்!'' என்றாள் விஜயா.


""நான் என்ன செய்வேன் தெரியுமா விஜயா? கறந்த பாலைக் கொண்டு போய் விற்று காசாக்குவேன்!'' என்றான் சுந்தரம்.


""விற்காது மீதமான பாலை காய்ச்சி அதை தயிராக்குவேன். தயிரை கடைவேன். வெண்ணை கிடைக்கும். வெண்ணையை காய்ச்சுவேன். நெய் கிடைக்கும், தயிர், மோர், வெண்ணை, நெய் எல்லாம் கூடையில் எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக போய் விற்பேன். விற்று காசாக்குவேன். காசை பணமாக்குவேன்...'' எனக்கு அவ்வளவு திறமை இருக்கு தெரியுமா? என்றாள் விஜயா.



""அப்படி செய்தும் பால், தயிர், வெண்ணை, நெய் மிச்சமாகி விட்டால் என்ன செய்வது?'' என்று கவலைப்பட்டான் சுந்தரம்.



""இதற்காக கவலைப்படுவார்களா என்ன? நாலு வீடு தள்ளித்தானே என் தங்கை குழந்தை குட்டிகளோடு இருக்கிறாள். அவளுக்கு கொடுத்து விடுவேன்!'' என்றாள் விஜயா. அதைக் கேட்டதும் கோபம் பொத்துக் கொண்டது.



""நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவைகளை உன் தங்கைக்கும், குழந்தைகளுக்கும் கொண்டு போய் கொடுப்பாயா? அவைகளை நீ கொண்டு போய் கொடுக்காதபடி செய்து விடுகிறேன் பார்!'' என்று கத்தியபடி வீட்டிலிருக்கிற நான்கு பானைகளை தயிர், மோர், வெண்ணை, நெய் இருப்பதாக நினைத்துக் கொண்டு எல்லாப் பானைகளையும் உடைத்து விட்டான் சுந்தரம்.



இவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் பக்கத்து வீட்டு ரங்கன் பகல் கனவு கண்டு கடைசியில் தம் கைப் பொருளை இழக்கும் இருவருக்கும் புத்தி வர ஏதாவது செய்ய வேண்டும் என்றெண்ணினார்.



சுந்தரம் வீட்டினுள் நுழைந்தார். அங்கு மூலையில் சார்த்தி வைத்திருந்த ஒரு கோலை எடுத்து வெறும் வெளியில் அப்படி இப்படி வீசி, ""ஹை... ஹை...'' என்று விரட்டினார்.



""ரங்கா...! எதை விரட்டுகிறீர்கள்?'' என்றான் சுந்தரம்.



""உன் பசு என் தோட்டத்தில் நுழைந்து செடிகளை எல்லாம் நாசமாக்கிவிட்டது. எனக்கு நஷ்டஈடு கொடு!'' என்றான்.



""யோவ்! என்னய்யா சொல்ற... இது என்ன புது கதை... எங்ககிட்ட ஏது பசு?'' என்று ஒரே நேரத்தில் சண்டைப் போட்டனர் கணவன், மனைவி இருவரும்.



""இப்போ புரியுதா... இல்லாத பசுக்களை வைத்து சண்டைப் போட்டே இருவரும் இவ்வளவு நாட்கள் பொழைப்பை ஓட்டி விட்டீர்கள். இதனால் லாபம் என்ன? உங்க வீட்டுப் பொருட்கள் போனதுதான் மிச்சம். இனி இந்த கற்பனை கோட்டையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உழைக்கிற வழியை பாருங்க!'' என்றார்.இருவரும் வெட் கத்தில் தலை குனிந்தனர்.

Tuesday, November 16, 2010

காப்பாத்துங்க!



சிங்காரவனக் காட்டில் இரண்டு ஜோடிப் புறாக்கள் வசித்து வந்தன. அவை நீண்ட காலம் அந்தக் கிளையில் கூடு கட்டி வசித்து வந்தன. ஒரு நாள் பெண் புறா முட்டைகள் இட்டது. உடனே அதற்கு வழக்கமாக வரும் கவலை வந்துவிட்டது. யாராவது வேடன் வந்து தன் முட்டைகளை எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற பயம்தான் அது. சில வருடங்களுக்கு முன் அது பல முட்டைகளை இழந்திருந்தது. ஆகவேதான் இந்த முறையும் அப்படி நடந்து விடுமோ என்ற பயம் வந்தது.


""அன்பே! இந்த முறையும் எனக்கு நமது முட்டைகளைப் பற்றிய பயம் வந்துவிட்டது. நாம் எத்தனை காலம்தான் இப்படி தனித்தே வாழ்வது? நமக்கு ஏதாவது ஆபத்து என்றால் இங்கு உதவிக்கு ஓடி வருவார் யாருமில்லை. ஆகவே இங்கிருந்து யாருடனாவது நட்புக் கொள்வது நல்லது!'' என்றது.



""நீ சொல்வது சரிதான். யாருடனாவது பழகலாமென்றால் நம் இனத்தைச் சேர்ந்த யாருமே இங்கில்லையே!'' என்றது. ""நம் இனம் இல்லாவிட்டால் என்ன! இங்க பருந்து, காகம், கிளி, மைனா போன்ற பறவைகள் எத்தனையோ இருக்கின்றன. அவைகளிடம் நாம் பழகலாமே!'' என்றது பெண் புறா.


மறுநாள்—


ஆண் புறா, பருந்துகள் வசிக்கும் மரத்திற்கு சென்றது. அப்பருந்துகள் புறாவை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தன. உபசரிப்பை ஏற்றுக் கொண்ட புறா, தன் எண்ணத்தை வெளிப்படுத்தியது. அதைக் கேட்ட பருந்துகள் மிகவும் சந்தோஷமடைந்தது.


""அதற்கென்ன புறா சகோதரனே! நம் இரு குடும்பமும் இன்றிலிருந்தே நல்ல நட்புடன் இருப்போம். பிறகு ஒரு விஷயம். அதோ அந்த ஆலமரம் இருக்கிறதே அதனிடம் உள்ள ஒரு பொந்தில் கருநாகம் ஒன்று வசித்து வருகிறது. பார்க்கப் போனால் அதுவும் வேறினம் தான். அதனிடம் நாம் நட்புக் கொண்டால் அதனுடைய உதவியும் நமக்கு சமயத்தில் கிடைக்குமே,'' என்று சொல்லிற்று. பிறகு பருந்தும், புறாவும் கருநாகத்திடம் சென்று அதனிடம் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தன. கருநாகமும் அவற்றிடம் உற்ற நண்பனாக இருப்பதாக வாக்களித்தது. அன்றிலிருந்தே புறா, பருந்து, கருநாகம் ஆகிய மூன்றும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டன.


ஒரு நாள்— அந்தக் காட்டிற்கு வந்த வேடனொருவன் பகல் முழுக்க சுற்றி அலைந்து, எதுவும் கிடைக்காது போகவே அவனது கண்கள் தற்செயலாக புறாக்களின் கூட்டைப் பார்த்துவிட்டது.


மரத்தின் மீது எப்படி ஏறலாம் என்று அங்கும், இங்கும் பார்த்தான். மரத்தின் கிளைகள் மிகவும் அடர்த்தியாக இருந்ததால் மரத்தில் ஏறுவது மிகவும் சிரமம் என்று நினைத்தான். அப்பொழுது இரை தேடிவிட்டு தங்கள் சிறிய குஞ்சுகளுக்கும் உணவு எடுத்துக் கொண்டு வந்த ஜோடிப் புறாக்கள் வேடனைப் பார்த்துவிட்டன. தங்களுக்கு வந்திருக்கும் ஆபத்தை அறியாத இளங்குஞ்சுகள் தங்கள் தாய், தந்தையரைப் பார்த்த சந்தோஷத்தில் "கீக்கீ' என்று கத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.


இந்த சப்தத்தை கேட்டுவிட்டு வேடன் பெரிதும் மகிழ்ந்தான். கூட்டில் நிறைய பறவைகள் இருப்பதாக அவன் நினைத்துவிட்டான். உடனே அவன் தனது தோளில் மாட்டியிருந்த துப்பாக்கியை எடுத்து அந்தப் பறவைக் கூட்டைக் குறிவைத்தான். இதைக் கவனித்துவிட்ட ஜோடிப் புறாக்கள் பதறிவிட்டன. தங்களைப் பற்றிக் கூட அவை கவலைப்படவில்லை. நேற்றுதான் பிறந்த புதிய குஞ்சுகளை அவ்வேடனிடம் இருந்து எப்படிக் காப்பாற்றுவது என்பது புரியாமல் திகைத்தனர் திண்டாடின.


இறக்கைகளை வேகமாக அடித்துக் கொண்டு தங்கள் பலங்கொண்ட மட்டும் கத்தின. இந்த சத்தம் சிறிது தூரத்தில் தள்ளி வசித்துவந்த பருந்துகளுக்குக் கேட்டது. உடனே அந்தப் புறாக்களுக்கு ஏதோ ஆபத்து என்பதை பருந்துகள் புரிந்து கொண்டன. உடனே அவை தங்களது கூட்டை விட்டு வெளியே வந்து பார்த்தன. வேடன் ஒருவன் துப்பாக்கியால் மரத்தைக் குறி வைத்தபடி நிற்பதைப் பார்த்த பருந்துகள் அந்த வேடனிடம் இருந்து புறாக்களை காப்பாற்ற நினைத்தன. உடனே அவை ஆலமரத்தின் பொந்திற்குச் சென்று கருநாகத்திடம் விஷயத்தைச் சொல்லின. கருநாகம் பொந்தை விட்டு வெளியே வந்து பார்த்து நிலைமையை உணர்ந்துக் கொண்டன.



"கையில் துப்பாக்கி வைத்திருக்கிறானே!' என்று அது ஒரு வினாடி யோசித்தது. அவனை சமயோஜிதமாகத்தான் அந்த இடத்தை விட்டு விரட்ட வேண்டும் என்று அது முடிவு செய்து "கிடுகிடு'வென்று யோசித்தது. ""கவலைப்படாதீர்கள் நண்பர்களே! நம் புறா நண்பர்களை அந்த வேடனிடமிருந்து நான் காப்பாற்றுகிறேன்!'' என்ற சொல்லிவிட்டு "சரசர'வென்று ஊர்ந்து சென்று வேடனுக்குப் பின்புறமிருந்த ஒரு மரத்தின் மீது ஏறியது. அடர்ந்த கிளைகளும், இலைகளும் அதற்கு நல்ல பாதுகாப்பைக் கொடுக்க, மிகவும் கவனமாக கிளைகளினிடையே ஊர்ந்து சென்ற கருநாகம், வேடன் நிற்கும் இடத்திற்கு நேர் மேலே வந்தது.


வேடன் ஒரு கண்ணை மூடி புறாக்கூட்டை இன்னும் குறி பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் சிறிது கூட அசையவே இல்லை. கருநாகம் அவன் மீது எப்போது விழலாம் என்று தருணம் பார்த்துக் கொண்டே இருந்தது. திடீரென்று— வேடனின் முகம் மாறியது. சட்டென்று துப்பாக்கியை எடுத்து கீழே ஊன்றி, குனிந்து காலைச் சொறிந்தான். அந்த சமயத்திற்காகவே காத்திருந்த கருநாகம் "தொம்'மென்று அவன் கழுத்தில் விழுந்து சுற்றிக் கொண்டது.


தன் கழுத்தில் ஏதோ விழுந்து இறுக்குவதை உணர்ந்த வேடன் நிலைகுலைந்து துப்பாக்கியின் பிடியை விட்டான். தன் கழுத்தை ஒரு கருநாகம் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து "ஓ' என்று அலறினான். கருநாகம் அவன் முன் "புஸ்... புஸ்...'' என்று சீறியது.


""ஐயோ! என்னை ஒன்றும் செய்யாதே. விட்டுடு!'' என்று மரண ஓலமிட்டான்.



அதைக் கையெடுத்துக் கும்பிட்டான். பாம்பு அவனைக் கொத்தப் போவது போல் பல முறை பயம் காட்டிவிட்டு மெல்ல அவனை விட்டுக் கீழே இறங்கியது. அது இறங்கியதுதான் தாமதம். வேடன் துப்பாக்கியை விட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று எண்ணி அந்த இடத்தை விட்டுத் தலைதெறிக்க ஓடினான்.


தங்கள் உயிர் நண்பர்களால் காப்பாற்றப்பட்டு விட்டோம் என்பதை அறிந்த ஜோடிப் புறாக்களும் அதன் குஞ்சுகளும், பருந்துகளுக்கும், கருநாகத்திற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டன. அதன் பிறகு அந்தப் புறாக்களும், பருந்துகளும், கருநாகமும் ஒன்றுக் கொன்று உற்ற தோழர்களாய் நீண்ட காலம் அந்தக் காட்டில் வாழ்ந்தன. புஜ்ஜீஸ்களே... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப, இப்பறவைகள் போல், நாமும் நட்புடன் வாழ்ந்தால் எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு மகிழ்ச்சி அடையலாம். நீங்களும் உங்க பிரெண்ட்ஸ் கிட்ட சண்டைப் போடாம ஒற்றுமையாகதானே இருக்கிறீர்கள்?

Monday, November 15, 2010

பெரியவங்க சொன்னா கேட்கணும்

அந்தியூர் என்ற காட்டில் புறாக்கள் கூட்டமாக சேர்ந்து ஒரு ஆலமரத்தில் வாழ்ந்து வந்தன, அவற்றில் ஒரு வயதான புறாவும் உண்டு, புறாக்கள் எல்லாம் இரை தேடி வந்து மரத்தில் அமரும். அப்போ வயதான புறா தன் அனுபவங்களை கூறும், அப்போ நிறைய புறாக்கள் பழங்கதைகள் சொல்லி எங்களுக்கு ஏன் வீணாக அறிவுரை சொல்லுறீங்க, நாங்களே யோசிக்கும் அளவுக்கு எங்களுக்கும் அறிவு இருக்குது என்று உதாசினப்படுத்துவார்கள். சிலருக்கு உண்மையிலேயே ஆபத்து வந்தால் அப்போ அந்த வயதான புறா தான் நல்ல வழி காட்டும்.





ஒரு நாள் அனைத்து புறாக்களும் சேர்ந்து உணவு தேடி சென்றன. அப்போ ஓரிடத்தில் பறவைகளைப் பிடிக்க வேடன் ஒருவன் வலை விரித்திருந்தான், அதன் அடியில் பெரிய பெரிய நெல்மணிகளை கொட்டியிருந்தான்.

அப்போ புறாக்கள் அனைத்தும் அந்த நெல்மணிகளை சாப்பிட திட்டமிட்டன, ஆனால் வயதான புறா அது வேடம் விரித்த வலை, நாம் போய் நெல்லை சாப்பிட்டால் மாட்டிக் கொள்வோம், எனவே வேற இடத்தில் இரைத் தேடலாம் என்றது, ஆனால் மற்றவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. வலையில் மாட்டாமல் நெல்மணிகளை சாப்பிட போகிறோம் என்று கூறி வலையின் மீது சாமர்த்தியமாக அமர்ந்து சாப்பிட்டன, ஒரு புறாவும் வலையில் மாட்டவில்லை, அப்போ வயதான புறாவைப் பார்த்து கேலி செய்தன மற்ற புறாக்கள்.

திடிரென்று ஒரு குண்டு புறா நிலைத் தடுமாறி ஒரு புறா மேல் விழ, அனைத்தும் சரிந்து நிலை குலைய, அவற்றின் கால்கள் வலையின் பின்னிக் கொண்டன, அவ்வளவு தான் அனைத்து புறாக்களும் வலையில் மாட்டிக் கொண்டன.

அவ்வளவு தான் அனைத்தும் என்ன என்ன முயற்சியோ செய்தன, ஆனால் ஒன்றும் முடியவில்லை. வலையானது தரையோடு சேர்த்து அடிக்கப்படிருந்தது.

உடனே அனைத்துப் புறாக்களும் வயதான புறாவை பார்த்து மன்னிப்பு கேட்டு, தங்களை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்றன.

வயதான புறா “என் ஒருவனால் உங்கள் அனைவரையும் விடுவிக்க முடியாது, அதற்கான சக்தியும் என்னிடம் இல்லை, ஆனால் என்னுடைய வயதான அனுபவத்தால் கிடைத்ததை வைத்து ஒரு வழி சொல்கிறேன், அதன்படி நடந்தால் தப்பிக்கலாம் என்றது.

மற்ற புறாக்கள் கண்டிப்பாக சொல்லுங்க, இதுவரை உங்கள் அனுபவங்களை உதாசினப்படுத்தியதற்கு மன்னியுங்க என்றன.

வயதான புறா “இன்னும் கொஞ்ச நேரத்தில் வேடன் வருவான், அவன் வரும் போது நீங்க யாரும் உயிரோடு இருப்பது போல் காட்டிக் கொள்ளக்கூடாது, மரணம் அடைந்த மாதிரி விழுந்து கிடக்க வேண்டும்.”

“அவனும் செத்துப் போன புறாக்கள் தானே என்று உங்களை தரையில் போடுவான், கடைசி புறாவை போடும் வரை அமைதி காக்க வேண்டும், கடைசி புறாவைப் போட்டதும், நான் வேகமாக வந்து வேடனை கொத்துவேன், அவன் நிலை குலைந்தவுடன் நீங்க அனைவரும் உடனே பறந்து தப்பிவிடுங்க”

அனைத்து புறாக்களும் வயதான புறாவை வணங்கி, அது சொன்னது போல் செத்துப் போனது போல் நடித்தன, அங்கே வந்த வேடனும் அனைத்தும் செத்து கிடப்பதைக் கண்டு, தண்ணீர் குடிக்காததால் ஒருவேளை அனைத்தும் இறந்து போயிருக்கும் என்று நினைத்து, ஒவ்வொரு புறாவையும் வலையில் விடுவித்து கீழே போட்டான். கடைசி புறாவையும் போட்டு நிமிர்ந்து நிற்கவும், நம்ம வயதான புறா வேகமாக பறந்து வந்து வேடனின் தலையில் கொத்தியது, திடிரென்று நடந்த இந்த சம்பவத்தால் வேடன் பயந்து கண்களை மூடிக் கொண்டு, தலையின் மேல் கைகளை வீசினான்.

அவ்வளவு தான் அந்த சந்தர்ப்பத்தில் அனைத்து புறாக்களும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பது போல் தப்பி பறந்தோடின.

பின்னர் அனைத்து புறாக்களும் ஆலமரத்தில் கூடி, வயதான புறாவை போற்றின, பெரியவங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கும், அவர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் துன்பமே வராது என்பதை புரிந்துக் கொண்டோம், இனிமேல் உங்கள் அறிவுரைப் படியே நடப்போம் என்று உறுதி கூறின. தினமும் வயதான புறாவின் அறிவுரைகள் கேட்டு நடந்து,. ஆபத்தில்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.


Sunday, November 14, 2010

எத்தனுக்கு எத்தன்

வயல்நாடு என்ற ஊரில் கந்தன் என்ற உழவர் இருந்தார், அவரது மகன் இனியன் இருவரும் தங்கள் வயலில் விளைந்த நெல் மூட்டைகளை வண்டியில் ஏற்றினார்கள், பின்னர் கந்தன் மட்டும் அவற்றைப் பக்கத்து
ஊர்ச் சந்தையில் விற்பதற்காகப் புறப்பட்டார்.



ஊர்ச்சந்தைக்கு போகும் வழியில் அவரைச் சந்தித்த ஒரு வியாபாரி,

மூட்டை நெல் என்ன விலை? என்று கேட்டான்.

500 ரூபாய் என்றார் உழவர்.

விலை குறைத்துக் கொடுக்கக் கூடாதா என்று கேட்டான் வணிகன்.

நீங்கள் ஒரு மூட்டை நெல் வாங்கினாலும் சரி. வண்டியோடு எல்லா மூட்டை நெல்லையும் வாங்கி னாலும் சரி, ஐநூறுக்கு ஒரு ரூபாய் குறைத்து வாங்க மாட்டேன் என்று சொன்னார் கந்தன்.

ஏமாற்றுக்காரனான அந்த வணிகன், வண்டியோடு எல்லாவற்றையும் வாங்கிக் கொள்கிறேன் என்றான்.

மகிழ்ந்த உழவர் அவன் வீட்டில் நெல் மூட்டை களை இறக்கினார்.

பணம் தாருங்கள் என்றார்.

உழவர் கையில் வணிகன் 500 ரூபாய் தந்தான்.

என்ன ஐநூறு ரூபாய் மட்டும்தான் தருகிறீர்கள்? என்று கேட்டார் உழவர்.

நீ என்ன சொன்னாய்? ஒரு மூட்டை நெல் வாங்கினாலும் சரி. எல்லாவற்றையும் வண்டியோடு வாங்கி னாலும் சரி. ஐநூறு ரூபாய்தான் என்றாய். ஆகவே உன்னிடம் ஐநூறு ரூபாய் தந்துவிட்டேன். சொன்னபடியே வண்டியோடு நெல்லை வாங்கிக் கொண்டேன். நீ போய் வா என்றான்.

கந்தன் உடனே “என்ன வியாபாரி ஏமாற்ற பார்க்கிறீங்களா? நான் பேச்சு அப்படி சொன்னேன், அதுவும் ஒரு மூட்டை ஐநூறு என்றும், வண்டியோடு இருக்கும் அத்தனை மூட்டைகள் வாங்கினாலும் ஒரு மூட்டையின் விலை ஐநூறுக்கு குறையாது என்ற அர்த்தத்தில் சொன்னேன்” என்றார்.

ஆனால் அந்த வியாபாரி ஒத்துக் கொள்ளவில்லை, சொன்ன சொல்லை காப்பாற்று, வண்டியோடு ஐநூறு தான் வருவேன் என்று அடம்பிடித்தான்.

கோபம் கொண்ட கந்தன் அந்த ஊரில் இருந்த பெரியவர்களிடம் சென்று தனக்கு நீதி வழங்குமாறு வேண்டினார்.

அவன்தான் பெரிய ஏமாற்றுக்காரன் ஆயிற்றே, வண்டியோடு, நெல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாலும் ஐந்நூறு ரூபாய்தான் என்று ஏன் சொன்னாய்? உன் பேச்சை வைத்தே உன்னை ஏமாற்றி விட்டானே. நாங்கள் என்ன செய்ய முடியும்? இனியாவது கவனமாக இரு என்று சொல்லி கந்தனை அனுப்பி வைத்தார்கள்.

ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார் கந்தன். நடந்ததை அறிந்த அவன் மகன் இனியன், அப்பா, கவலைப்படாதீர்கள். உங்களை ஏமாற்றியவனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பாடம் கற்றுத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு வண்டியில் நெல் மூட்டையை ஏற்றிக் கொண்டு அந்த ஊர் நோக்கிச் சென்றான்.


உழவனை ஏமாற்றிய வணிகன் தன் நான்கு வயது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான். எதிரே வண்டி நிறைய நெல் மூட்டை வருவதை அறிந்து மகிழ்ந்தான்.

வண்டியோட்டியைப் பார்த்து,

ஒரு மூட்டை நெல் என்ன விலை? என்று கேட்டான்.

தன் தந்தையை ஏமாற்றியவன் இவன்தான் என்பதை அறிந்த இளைஞன், ஐயா, உங்களைப் பார்த்தாலே, பெரிய மனிதராகத் தெரிகிறது. என்னை ஏமாற்றவா போகிறீர்கள்? உங்கள் மகனின் பிஞ்சுக் கைகளில் சில நாணயங்களை வைத்துக் கொடுங்கள். அதுபோதும் என்று இனிமையாகப் பேசினான்.

இன்று யார் முகத்தில் விழித்தேனோ? என்று தன்னையே பாராட்டிக் கொண்ட வணிகன், சரி, நீ சொன்னபடியே தருகிறேன். நெல் மூட்டைகளை எல்லாம் வீட்டில் இறக்கி வை என்றான்.

அப்படியே செய்தான்.

இளைஞன். தன் மகனின் கைகளில் ஐந்து செப்பு நாணயங்களைத் தந்த வணிகன்,

இதை அவரிடம் தந்து விடு என்றான். அந்த மகனும் தன் கையை இளைஞனிடம் நீட்டினான்.

தன் பையில் கை விட்டு கத்தியை எடுத்தான் இளைஞன்.

எதற்காகக் கத்தியை எடுக்கிறாய? என்று கேட்டான் வணிகன்.

நான் என்ன சொன்னேன்? உங்கள் மகனின் கைகளில் வைத்து நான்கைந்து நாணயங்கள் தாருங்கள் என்றேன். அதன்படி உங்கள் மகனின் கைகளை வெட்டி எடுத்துச் செல்லப் போகிறேன் என்றான் இளைஞன்.

அப்பொழுதுதான் வணிகனுக்கு உண்மை புரிந்தது.

இளைஞன் சொன்ன சொற்களுக்குக் கைகளுடன் நாணயங்கள் என்ற பொருளும் உள்ளது. மகிழ்ச்சிப் பரபரப்பில் நான் அதைப் புரிந்து கொள்ளவில்லையே. வழக்கு ஊர்ப் பெரியவர்களிடம் சென்றால் சொன்னபடியே மகனின் கையை வெட்டிக் கொடுத்து விடு என்றுதான் தீர்ப்பு வழங்குவார்கள். என்ன செய்வது என்று சிந்தித்தான்.

நீ கொண்டு வந்த நெல் மூட்டைகளுக்கு உரிய விலைக்கு மேல் அதிகப் பணம் தருகிறேன். என் மகனின் கையை வெட்டி விடாதே என்று கெஞ்சினான் அவன்.

என் தந்தையை ஏமாற்றியது போல் என்னையும் ஏமாற்றப் பார்க் கிறாயா? உன் ஏமாற்றுத்தனங்களுக்கு எல்லாம் நல்ல பாடம் உன் ஒரே மகனின் கையை வெட்டுவதுதான். சொன்ன சொல் மாறாதே என்று கோபத்துடன் சொன்னான் இளைஞன்.
தன்னை விட திறமைசாலியிடம் சிக்கி இருக்கிறோம் என்பதை உணர்ந்தான் வணிகன். அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

நடந்ததை அறிந்த ஊர் மக்கள் எல்லோரும் அங்கே கூடி விட்டனர்.

இவனால் இந்த ஊருக்கே கெட்ட பெயர். மகனின் கையை வெட்டுவதுதான் இவன் செய்த தீமைகளுக்கு எல்லாம் தக்க தண்டனை என்றார்கள் ஊர்ப் பெரியவர்கள்.

இளைஞனின் கால்களில் விழுந்த வணிகன், இனி என் வாழ்நாளில் யாரையும் ஏமாற்ற கனவில் கூட நினைக்கவே மாட்டேன். உன் தந்தையார்க்கும் உனக்கும் ஏற்பட்ட இழப்பைப் போல நான்கு மடங்குத் தொகை தருகிறேன். என்னை மன்னித்து விடு. என் மகனின் கையை வெட்டாதே என்று அழுது புலம்பினான். உள்ளம் இரங்கிய இளைஞன்,

இனியாவது நேர்மையாக நடந்து கொள். எங்கள் இழப்பிற்கு உரிய தொகை மட்டும் கொடு என்று சொல்லிவிட்டு அவன் கொடுத்த தொகையைப் பெற்றுக் கொண்டு ஊர் திரும்பினான் நம்ம புத்திச்சாலி இனியன்.