அன்று முதல் அந்த மான்,சிங்கம் என்றாலே பயந்து கொண்டிருந்தது. எனவே மான் மனிதர்கள் வாழும் நாட்டிற்குள் சென்றால் பயமின்றி வாழலாம் என்று நினைத்து காட்டை விட்டுப் புறப்பட்டது. மான் சென்று கொண்டிருந்த வழியில் ஆடு ஒன்றுகாட்டை நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்து, இவளவு வேகமாக வருகிறாயே எங்கே என்று கேட்டது மான். காட்டிற்குத்தான் என்றது ஆடு, ஏன் என்று கேட்டது மான். காட்டில் பயமின்றி வாழத்தான் என்றது ஆடு. நாட்டில் என்ன பயம்? என்று கேட்டது மான். மனிதர் பயம்தான் என்றது ஆடு. என்ன! மனிதர் பயமா? சிங்கத்தை விடமனிதர்கள் பொல்லாதவர்களா என்று வியப்பாகக் கேட்டது மான். ஆமாம் சிங்கத்தை விட மனிதர்கள் மிகவும் பொல்லாதவர்கள். சிங்கம் பசித்தால்தான் நம்மைக் கொல்லும், ஆனால் மனிதர்கள் எம்மைக் கொன்று தின்பதற்காகவே வளர்க்கிறார்கள். சிங்கத்திடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் ஆனால் மனிதர்களிடமிருந்து தப்பவேமுடியாது. நல்லவேளை இன்று என்னைக் கொல்லப் பார்த்தார்கள். முன்னரே இதை அறிந்து நான் அவர்களிடமிருந்து தப்பிக்கொண்டேன். இல்லாவிட்டால் இந்நேரம் அவர்களுக்கு உணவாகியிருப்பேன் என்று ஆடு சொன்னது. இதைக் கேட்ட மானுக்கு சிங்கத்தின் பயம் போய்விட்டது. அதற்குப் பதில் மனிதர்கள் என்றாலே பயம் வந்து விட்டது. எனவே தற்போது இருக்கும் காடே நலம் என்று கருதி, ஆட்டிற்கு நன்றி கூறிவிட்டு மறுபடி காட்டை நோக்கிச் சென்றது மான்
Saturday, January 8, 2011
இக்கரைக்கு அக்கரை பச்சை
மான் ஒன்று ஓடையில் நீர் குடிக்கச் சென்றபோது சிங்கத்தால் துரத்தப்பட்டு எப்படியோ தப்பிக்கொண்டது.
Friday, January 7, 2011
நாய்க்குட்டி சென்ன நீதி
ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது.
ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.
இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.
என்ன காக்கையாரே!ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.
அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.
இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை இல்லாதொலித்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி
எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை,சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.
உண்மைதான்! என்றது நாய்க் குட்டி
பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.
ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.
இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?
குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.
ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி
அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.
திருடுதல்,ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.
Thursday, January 6, 2011
நரி புகட்டிய பாடம்
ஓர் ஊரில் பேராசைக்கார இடையன் ஒருவன் இருந்தான்.அவன் பணத்தைச் செலவழிக்காமல் மந்தைகளைப் பெருக்க வேண்டும் என்று எண்ணினான் . அதற்காக ஒரு திட்டமும் தீட்டினான்,
ஒரு நாள் காட்டிற்குச் சென்று ஓநாய்க் குட்டி ஒன்றைப் பிடித்து வந்தான்.அந்த ஓநாய்க் குட்டிக்கு, மற்றவர்களின் மந்தைக் கூட்டத்திற்குள் புகுந்து ஆடுகளைத் திருடிக் கொண்டுவர கடுமையான பயிற்சியளித்தான்.
நன்றாகக் களவு வித்தையைக் கற்றுக் கொண்ட ஓநாய்குட்டி பக்கத்து மந்தைக் கூட்டத்திலிருந்து இரவு வேளைகளில் இரண்டு, மூன்று ஆடுகளைக் திருடிக் கொண்டுவரும்.
பத்திரமாக ஆடுகளை ஒப்படைக்கும் ஓநாய்க்குட்டிக்கு தினமும் ஒவ்வொரு ஆட்டை உணவாகக் கொடுப்பான்.
பேராசைக்கார இடையனிடம் பணம் செலவு செய்யாமல் மந்தைக் கூட்டம் பெருகிக் கொண்டே வந்தது.அவனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சிஏற்பட்டது.
பேராசைக்கார இடையனிடம் மந்தைக் கூட்டம் பெருகிய அதேவேளை,பக்கத்து மந்தைகளில் ஆடுகள் குறைந்து கொண்டே வந்தன, இதனால் பக்கத்து மந்தைக்காரர்கள் தங்கள் மந்தைக் கூட்டத்திற்கு பலத்த காவல் போட்டனர்.
பக்கத்து மந்தைக் கூட்டத்திற்கு பலத்த காவல் போடப்பட்டதால் ஓநாய்க் குட்டியால் முன்புபோல ஆடுகளைத் திருடமுடியவில்லை,ஆடுகளை ஓநாய் திருடிக் கொண்டுவராததால் ஓநாய்க்கு தினமும் உணவாகக் கிடைக்கும் ஆடும் கிடைப்பதில்லை.
பசி பொறுக்க முடியாத ஓநாய், பேராசைக்கார இடையனின் மந்தைக் கூட்டத்தில் இருந்து ஆடுகளைத் திருடித் தின்ன ஆரம்பித்தது.
தன் மந்தையில் உள்ள ஆடுகள் குறைந்து வருவதைப் பேராசைக்கார இடையன் கவனித்தான்.ஒரு நாள் .ஒநாய்க்குட்டி அவன் மந்தையில் உள்ள ஆட்டை அடித்துத் தின்பதைப் பார்த்துவிட்டான்.
உடனே கோபம் கொண்டு ஒரு தடியை எடுத்துக்கொண்டு ஓநாய்க்குட்டியை அடிக்க ஓடினான். தன்னை இடையன் அடிக்க வருவதைப் பார்த்த ஓநாய் அவனிடம், "பேராசைக்காரா! நீதானே இந்தவித்தையைக் கற்பித்தாய்? உனது மந்தையில் உள்ள ஆடுகளைத் திருடும் போது உனக்கு இவ்வளவு கோபம் வருகிறதே? மற்றவர்களின் ஆடுகளைத் திருடும்போது, அவர்கள் மனது எவ்வள்வு வேதனைப்படும் என்று உனக்குத் தெரியமா?"
Wednesday, January 5, 2011
வேடன் விரித்த வலை
ஒரு காட்டில் வேடன் ஒருவன் விரித்த வலை ஒன்றில் புறா ஒன்று சிக்கிக்கொண்டது. வேடன் வருவதற்கு முன் வலையில் இருந்து விடுபட்டுச் சென்று விடவேண்டும்.என்று எண்ணி சிறகுகளைப் படபபவென்று அடிக்க. அதுவலையில் வசமாகமாட்டிக்கொண்டது.
புறாவால் இப்போது சிறகுகளை அசைக்க முடியாமல் போய்விட்டது. வலை விரித்த வேடன் சிறிது நேரத்தின் பின்னர் அவ் விடத்துக்கு வந்தான்.தான் விரித்த வலையில் புறா ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டு மகிழ்ந்தான்.
வலையின் அருகேவந்த வேடன் புறாவை வலையில் இருந்து விடுவித்து.புறாவை கையில் இறுக்கிப்பிடித்தான்.அப்போதுபுறா வேடனைப் பார்த்து தயவு செய்து என்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடு. என்னை நீ விட்டுவிட்டால் நீ செய்த உதவியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்! என்று கெஞ்சியது.
வேடனோ, "என் மனதில் உன் இறைச்சியின் சுவைதான் நிறைந்திருக்கிறது. நான் உன்னை விட்டுவிட்டால் நீ என்னை மறக்கமாட்டேன் என்று சொன்னாய். அதனல் எனக்கு என்ன இலாபம்? எனவே பேசாமல் இரு!" என்று அதட்டினான் வேடன்.
உடனே புறா "அப்படியானால் உனக்கு ஏதாவது இலாபம் இருந்தால் என்னை விட்டு விடுவாயா?" என்று கேட்டது.
"எதாவது இலாபம் கிடைக்குமானால் உன்னை விடுவது பற்றி யோசனை செய்யலாம். என்ன இலாபம் என்று முதலில் சொல்!" என்று கேட்டான் வேடன்.
"இப்போது உனக்கு நான் ஒரு புறா மட்டும் தானே கிடைத்திருக்கிறேன்? நீ மட்டும் என்னை விட்டு விட்டால்,ஒரு புறாக் கூட்டத்தையே உன் வலையில் விழச் செய்வேன்!" என்று கூறியது புறா.
"எப்படி?" என்று கேட்டான் வேடன்.
வேடனும் தன்னை விடுவிக்கப் பேகிறான் என்ற மகிழ்ச்சியில், "நீ என்னை விடுவித்தால் நான் பறந்து சென்று என்னுடைய நண்பர்களிடம் நயமாகப் பேசி, இங்கு அழைத்து வந்து உன் வலையில் விழ வைப்பேன்" என்று சொன்னது புறா.
"புறாவே! நீ சொல்லும் உபாயம் எனக்கு இலாபம் தான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.ஆனாலும் நான் உன்னைவிடவேமாட்டேன்" என்றான் வேடன்.
"ஏன் என்னைவிடுவித்தால் உனக்கு லாபம்தானே?" என்று கேட்டது புறா.
"உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நீ உன் நண்பர்களைக் கொலையிட நினைக்கின்றாய் உனக்கு உயிர் வாழ்வதற்கு அருகதை
இல்லை. எனவே நான் உன்னை விட மாட்டேன்" என்று கூறி
புறாவை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான் வேடன்.
Tuesday, January 4, 2011
அறியாமல் இருக்கும் வரை
ஒரு நாள் சாரு எனும் இளைஞன் தனது வீட்டிற்குமுன்னால் உள்ள வேப்பமரத்தின் கீழே உட்கார்ந்திருந்தான். அவன் சோகமாக உட்க்கார்ந்திருப்பதைக் கண்ட வேப்பமரம் அவனிடம், "ஏன் தம்பி சோகமாயிருக்கிறாய்?" என்று கேட்டது.
இதைக் கேட்ட சாரு வேப்பமரத்திடம் "என் அப்பாவும் அம்மாவும் என்னை எப்போதும் படி படி என்று படாதபாடாய் படுத்துகின்றார்கள், அது மட்டுமின்றி கண்டபடி என்னை ஊர் சுத்தக்கூடாது என்றும் சொல்கிறார்கள். நான் இந்த வயதில் நண்பர்களுடன் கூடிவிளையாடிசந்தோசமாக இல்லாமல் .எப்போது சந்தோசமாக இருப்பது? என் நண்பர்கள் எல்லோரும் தினமும் பூங்கா, சினிமா என்று எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள் தெரியுமா? எனக்குத்தான் எந்த சுதந்திரமும் இல்லை!" என்று கலங்கியபடி சொன்னான்.
இதைக் கேட்டதும், "ஓ… சாரு இதுதான் உன் பிரச்சனையா? நான் ஒரு கருத்தைச் சொல்கிறேன் கேள்" என்ற வேப்பமரம், "நான் வேப்பமரம் தானே…?" என்றது, "ஆம். அதற்கென்ன இப்போ?" என்றான் சாரு.
"என் பாகங்கள் எல்லாம் எப்படி இருக்கும்?" என்றது வேப்பமரம்.
"கசப்பாக இருக்கும்!" என்றான் சாரு.
"சரி என் உறுப்புக்கள் கசப்பாக இருக்கும் ஆனால் என்னை மருந்தாகப் பயன்படுத்திப் பலர் சாப்பிடுகிறார்கள் அல்லவா?அதையே தொடர்ந்து உண்டு வந்தால் நான் நோய்களைக் குணப்படுத்த்தி விடுவேன்.
நான் கசப்பாக இருந்தாலும் என்னால் பலன் தான் கிடைக்குமே தவிர, தீமை ஒன்றும் ஏற்படாது. அது போலத்தான் பெற்றோர்கள் உங்களுக்குச் சொல்லும் அறிவுரைகள் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கும்.ஆனால் அவர்கலின் அறிவுரைகளைப் பின்பற்றி வந்தால் நீங்கள் முன்னேறலாம்.
உன் பெற்றோர்கள் உன்னைக் கண்டபடி ஊர் சுற்றாமல் கவனமாய் படிக்கச் சொல்வது உன் முன்னேற்றத்திற்காகத் தானே" என்று கூறியது வேப்பமரம்.
இதைக் கேட்டசாரு வேப்பமரம் கூறுவது நூற்றுக்கு நூறு சரி. உண்மைகள் கசப்பாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்தான். புத்தி தெளிவுடன் வேப்பமரத்திற்கு நன்றி சொல்லிவிட்டு பாடங்களைப் படிப்பதற்காக வீட்டிற்க்குச் சென்றான் சாரு.
Monday, January 3, 2011
உன்னை நீ அறிவாய்
ஒரு நாள் மாலை ஒரு அப்பாவும் அம்மாவும் தமது குழந்தையைக் கூட்டிக்கொண்டு கடற்கரைக்குச் சென்றனர். இரண்டு வயதுக் குழந்தை, கடற்கரை மணலில் கால் புதைய சாய்ந்து சாய்ந்து நடந்து, பெற்றோருடன் விளையாடியது.தமது பிள்ளை தத்தித் தத்தி நடப்பதைப் பார்த்து அவர்கள் சந்தோசப்பட்டார்கள்.
பிள்ளையுடன் விளையாடியபின் குழந்தையுடன் வீட்டிற்குப் புறப்பட்டார்கள்.இவற்றைலெல்லாம் அந்தக் கடற்கரையில் இருக்கும் சிறிய நண்டு ஒன்று கவனித்துக் கொண்டிருந்தது. அவர்கள்கடற்கரையை விட்டுப்போனதும் சிறிய நண்டு நேராகத் தன் தாயிடம் சென்றது அது தாயிடம், "அம்மா!எமது இருப்பிடத்திற்கு ஒரு தாயும் தந்தையும் தமது குழந்தையைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள் அந்தக் குழந்தை நடந்து விளையாடியதைப் பார்த்து அவர்கள் குதூகலித்தார்கள். ஆனால்,அந்தக் குழந்தைக்குச் சரியாக நடக்கத் தெரியவில்லை அக் குழந்தை சாய்ந்து சாய்ந்துதான் நடந்தது. குழந்தை நேராக நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா?" என்று கேட்டது.
இதைக் கேட்ட தாய் நண்டுக்குச் சிரிப்பு வந்தது,மகனே! எனக்கு முன்னால் நேராக ஒரு முறை நடந்து காட்டு பார்க்கலாம்!என்று சென்னது தாய் நண்டு.உடனே சிறிய நண்டு தாய் நண்டுக்கு முன்னால் நடந்து காட்டியது.ஆனால் நேராக நடக்காமல்.ஒரு பக்கம் இழுத்தாற்போல் இருந்தது சிறிய நண்டின் நடை.
இதைப் பார்த்த தாய் நண்டு "நீயும் ஒரு பக்கம் சாய்ந்துகொண்டுதானே நடக்கிறாய்?" என்று சொன்னது. சிறிய நண்டு மறுபடியும் நடந்து காட்டியது ஆனால் எவ்வளவோ முயன்றும் அதனால் நேராக நடக்கமுடியவில்லை. "நீ எப்படி நடக்கிறாய் என்று தெரியாமல் மற்றவரின் நடையில் குற்றம் கண்டுபிடிக்கிறாய். முதலில் உன்நடையைத் திருத்திக்கொண்டு.மற்றவர்களைப் பார்க்கவேண்டும்!" என்று அறிவுரை சொன்னது தாய் நண்டு. சிறிய நண்டு தாயின் அறிவுரையை அமைதியாகக் கேட்டது.
Sunday, January 2, 2011
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒரு காட்டில் காளைமாடு, சேவல், பன்றி, பூனை ,செம்மறியாடு ஆகிய ஐந்தும் ஒன்றாக வீடு கட்டி வாழ்ந்து வந்தன. இவைகள் ஒன்றுக்குகொன்று ஒற்றுமையாக இருந்தன. அந்தக் காட்டில் இருந்த நரி சேவலைப் பிடித்துத்தின்ன நீண்ட நாற்களாக திட்டமிட்டு வந்தது. அதே காட்டில் ஓர் ஓநாயும் இருந்தது. ஓநாயுக்கு செம்மறி ஆட்டைப் பிடித்துத் தின்னும் ஆசை இருந்தது.
ஒரு நாள் ஓநாயும் நரியும் சந்தித்தன.இருவரும் தமது விருப்பங்களை ஒருவருக்கு ஒருவர் தெரிவித்தனர். சமயம் பார்த்து ஓநாயும் நரியும் கரடியொன்றைக் கூட அழைத்துக் கொண்டு , காளைமாடு,சேவல். பன்றி, பூனை. செம்மறியாடு போன்றவை வசிக்கும் வீட்டுக்கு புறப்பட்டன. வீட்டிற்க்கு அருகில் வந்ததும் நரி ஓநாயையும் கரடியையும் பார்த்து நான் முதலில் உள்ளே போகிறேன், போய் சேவயைப் பிடித்தவுடன் குரல் கொடுப்பேன் நீங்கள் ஒவ்வருவராக உள்ளே வாருங்கள் என்றது ஓநாயும் கரடியும் அதற்க்கு சம்மதித்து வெளியே காத்திருக்க நரி உள்ளே சென்றது.
இவற்றைலெல்லாம் வீட்டின் மேல்புறத்தில் அமர்ந்திருந்த சேவல் அவதானித்தது. இதையெல்லாம் நண்பர்களிடம் சொல்லி எச்சரித்தது. கதவை திறந்து கொண்டு நரி உள்ளே போனபோது காளைமாடு வந்து முட்டித்தள்ளியது நரி நிலை குலைந்து கீழே விழ பூனையும் சேவலும் நரியைத் தாக்கத்தொடங்கின. வெளியே காத்திருந்த ஓநாய் கரடியைப் பார்த்து உள்ளே போன நரி சேவலைத்தின்று மயங்கிக்கிடக்கிறது போலும் நான் உள்ளே போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று உள்ளே போனது.
ஓநாய் உள்ளே நுழைந்தது தான் தாமதம் காளை மாடு அதை மோதித்தள்ளியது. ஓநாய் கீழே விழுந்தது பன்றியும் செம்மறியாடும் ஓநாயின் மேல் ஏறித்தாக்கின. வெளியே காத்திருந்த கரடி பொறுமை இழந்தது.இருவரும் உள்ளே என்ன? செய்கிறார்கள் என்று நினைத்தபடி கடகடவென உள்ளே வந்தது.வாசலுக்கு வந்ததுதான் தாமதம் காளைமாடு சற்றுப் பின்னே போய் ஒரே பாச்சலாக வந்து மோதியது. கரடி ஒவெனக் கத்தியபடி தூரத்தில் போய் விழுந்தது.
வீட்டுக்குள் அகப்பட்ட ஓநாயும் நரியும் எப்படியோ வெளியே வந்து தப்பினோம் பிழத்தோம் என்று ஒரேஓட்டமாக ஓடித்தப்பின. காளைமாடு, சேவல், பன்றி, பூனை ,செம்மறியாடு எல்லாம் ஒன்றாக ஒற்றுமையாக இருந்தபடியால் தங்களைக் கொல்லாவந்த எதிரிகளை அடித்துத்துரத்திவிட்டன.
நாம் எந்தக் காரியத்தையும் ஒற்றுமையுடன் செய்வேமாயின் எம்மை வெல்ல இவ்வுலகில் யாருமில்லை. நாம் ஒன்றுபடுவோம்.
Subscribe to:
Posts (Atom)